ஐஎஸ்ஐஎஸ், அல்-கொய்தா ேபான்ற பயங்கரவாத அமைப்புகள் கடந்த ஆண்டுகளில் தாக்கப்பட்டு தலைமைத்துவத்தை இழந்து பின்னடைவைச் சந்தித்துள்ளன. இருந்தாலும் மீள்திறனுடன் மாறிக் கொள்ளக் கூடிய ஆற்றல் உண்டு என்பதை அவை நிரூபித்துள்ளன.
அதே சமயத்தில் வலசாரி தீவிரவாதம் வளர்ந்து மிரட்டலாக தலை தூக்கி வருகிறது. அதன் ஆதரவாளர்கள் முன்பைவிட நன்கு திட்டமிட்டு தாக்குதலை நடத்தக் கூடியவர்களாக இருக்கின்றனர் என்று உள்துறை துணை அமைச்சர் டாக்டர் முகம்மது ஃபைசால் இப்ராஹிம் நேற்று தெரிவித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மிலிபோல் ஆசிய-பசிபிக் 2022 வட்டாரப் பாதுகாப்பு மாநாட்டின் முதல் நாளான நேற்று அவர் கலந்துகொண்டு ேபசினார். சேண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு நிலையத்தில் அந்த மாநாடு நடைபெற்றது.
"சிங்கப்பூர் உட்பட எந்த நாடும் பயங்கரவாதத்தை முற்றிலும் தடுக்கும் அரண் இல்லை," என்று இணைப் பேராசிரியரான ஃபைசால் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு மார்ச் 15ஆம் தேதி உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் முஸ்லிம்களைத் தாக்க திட்டமிட்ட 16 வயது சிங்கப்பூரர் 2020 டிசம்பரில் தடுத்து வைக்கப்பட்டதை அவர் உதாரணமாக சுட்டிக்காட்டினார். நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த தாக்குதலையும் அவர் குறிப்பிட்டு பேசினார். "வலசாரி தீவிரவாத சித்தாந்தத்தால் அவன் ஈர்க்கப்பட்டான். இஸ்லாம் மீது கடுமையான விரோதத்தைக் கொண்டிருந்தான, வன்முறை செயல்களால் அவன் கவரப்பட்டான்," என்றார் அவர்.
"பயங்கரவாதத்துக்கு எதிராக உள்நாட்டு முயற்சிகள் மட்டும் ேபாதாது. உலகம் முழுவதும் உள்ள சட்ட அமலாக்க அமைப்புகள் சேர்ந்து செயல்பட்டு பயங்கரவாத அமைப்புகளையும் தனிப்பட்டவர்கள் மேற்கொள்ளும் பயங்கரவாதச் செயல்களையும் கண்டுபிடித்து, தடுக்க வேண்டும்," என்று அமைச்சர் ஃபைசால் கேட்டுக் கொண்டார்.

