சுங்கவரி, பொருள் சேவை வரி செலுத்தாத சிகரெட்டுகளை சேகரித்து வைத்திருந்ததற்காகவும் அவற்றை விற்பனை செய்ததற்காகவும் கடந்த வாரம் 63 வயது சிங்கப்பூரருக்கு 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
'விஎஸ்எல் மேரிடைம் சரிவீசஸ், சப்ளைஸ்' எனும் கப்பல்களுக்குத் தேவையான பொருட்களை விநியோகிக்கும் நிறுவனத்தின் உரிமையாளரான டான் டோங் மெங், மற்ற பொருட்களுடன் சிகரெட்டுகளை மறைத்து வைத்திருந்தார்.
கப்பல்களுக்கு ஏற்றுமதி ெசய்யப்படும் சிகரெட்டுகளுக்கு சுங்க வரி, பொருள் சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இதனை தனக்குச் சாதமாக பயன்படுத்திக் கொண்ட டான், கப்பல்களுக்கு விற்பதாகக் கூறி கூடுதலாக சுங்க வரி செலுத்தாத சிகரெட்டுகளை வெளி இடங்களில் விற்று வந்தார். சில சிகரெட் பெட்டிகளை சேகரித்து வைத்திருந்தார். 2020 ஆகஸ்ட் முதல் 2021 ஜூன் வரையில் கப்பல்களுக்குத் தேவையான சிகரெட்டுகளைவிட கூடுதலாக சிகரெட்டுகளை பலமுறை டான் வாங்கியதாக சிங்கப்பூர் சுங்கத் துறை தனது அறிக்கையில் தெரிவித்தது.
2021 ஜூலை 2ஆம் தேதி சுங்கத் துறை அதிகாரிகள், அவரது இடத்தை சோதனையிட்டபோது வரி செலுத்தப்படாத 86 பெட்டி சிகரெட்டுகளைக் கண்டுபிடித்தனர். சுமார் 14 முறை ஏற்றுமதி அனுமதி பெற்று சிகரெட்டுகளை டான் மற்ற இடங்களில் விற்று வந்தது விசாரணையில் ெதரிய வந்தது. வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை சேமித்து வைத்த ஒரு குற்றச் சாட்டையும் வரி ஏய்ப்பு செய்த ஒன்பது மோசடிக் குற்றச்சாட்டுகளையும் டான் ஒப்புக் கொண்டார். மொத்தம் பத்து குற்றச் செயல்களில் 68,000 வெள்ளிக்கு அவர் வரி ஏய்ப்பு செய்துள்ளார்.
அவருக்கு தண்டனை விதிக்கப்படும்போது சுங்கவரி செலுத்தாத ஒரு குற்றச்சாட்டையும் வரி ஏய்ப்பு செய்த இதர 25 மோசடி குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொண்டது.

