நிதித் துறையில் இவ்வாண்டு புதிதாக 9,400 வேலைகள் உருவாக்கித் தரப்படும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் மதிப்பிட்டுள்ளது. இவற்றில் கிட்டத்தட்ட 3,000க்கும் அதிகமான வேலைகள், தொழில்நுட்பம் சார்ந்தவையாக இருக்கும் என்று ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பம் சார்ந்த இந்த வேலைகளில் மென்பொருள் வடிவமைப்பாளர்கள், பொறியாளர்கள் ஆகியோருக்காக ஒதுக்கப்படும் வேலைகள் சுமார் 700 என்றும் கூறப்பட்டது.
புதிதாக நியமிக்கப்படும் ஊழியர்கள், மின்னிலக்க நிதிச் சேவைகள் மற்றும் வர்த்தக நிதிச் சேவைகள் தொடர்பிலும் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு மோசடிச் சம்பவங்களைக் கண்டறிவது தொடர்பிலும் ஆதரவு அளிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் நிதிக் கருத்தரங்கின் போது தமது தொடக்க உரையில் திரு மேனன் இதனைத் தெரிவித்தார்.
வரும் ஆண்டுகளில் கூடுதல் ஏற்றுமதிகளாலும் உள்ளூரில் தேவைகள் அதிகரிப்பாலும் ஆசியா ஆண்டுக்கு 5% வளர்ச்சி காணும் என்று அவர் குறிப்பிட்டார். இதனால் அனைத்துலக திறனாளர்களை ஈர்க்கும் அதே சமயத்தில் வலுவான உள்ளூர் திறனாளர் வட்டத்தையும் சிங்கப்பூர் கொண்டிருப்பது அவசியம் என்றார் அவர்.
வலுவான சிங்கப்பூர் அடித்தளத்தை உருவாக்குவது தொடர்பில் பேசிய அவர், 'சிங்கப்பூரர்கள் மட்டும்' என்ற அணுகுமுறை இது அல்ல என்பதை வலியுறுத்தினார்.
அனைத்துலக நிதி மையமாக சிங்கப்பூர் வளர்ச்சி காண்பதற்கு இதுபோன்ற ஓர் அணுகுமுறை அபாயகரமாக அமைந்துவிடும் என்றார். நிதி நிலையங்களின் நிபுணத்துவத் தேவைகள் அதிவேகமாக விரிவடைந்து வரும் நிலையில் உள்ளூர்வாசிகளின் எண்ணிக்கையால் அதை ஈடுகட்ட முடியாது என்று திரு மேனன் குறிப்பிட்டார்.
அதைக் காட்டிலும் உள்ளூர் ஊழியரணியிடையே சிறந்த திறன்களையும் ஆற்றல்களையும் உருவாக்கி நியாயமான வேலை நியமன வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதே முக்கியம் என்றார் அவர்.
நிதித் துறையில் மூத்த பொறுப்புகளில் கடந்த ஆண்டு 3,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் இருந்தனர் என்று ஆணையம் மதிப்பிடுகிறது. இது 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 80% அதிகமாகும்.
"நிதித் துறை அதிவேக வளர்ச்சி கண்டு வருகிறது. அதனால் உருவாக்கப்படும் வேலைகளின் எண்ணிக்கைக்கு நமது சிறிய உள்ளூர் ஊழியரணியால் ஈடு தர முடியவில்லை.
நிரப்பப்படாத வேலைவாய்ப்புகள், உயர்ந்துவரும் ஊதியங்கள் ஆகியவற்றால் நமது ஊழியர் சந்தையும் திணறுகிறது," என்று அவர் குறிப்பிட்டார்.
அனைத்துலக திறனாளர்களை நாம் வரவேற்காவிட்டால் நிதித் துறை அதன் போட்டித்தன்மையை இழக்கும் என்றும் வளர்ச்சி சராசரியாகவே இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
இதற்கிடையே, வேலை அனுமதி அட்டை தொடர்பான விதிகளில் மாற்றங்கள் இருந்தாலும் சிங்கப்பூர் தொடர்ந்து வெளிநாட்டவரை வரவேற்பதாக திரு மேனன் குறிப்பிட்டார்.