கலாசார பதக்க விருதைப் பெற்றுள்ள உள்ளூர் முன்னோடித் தலைமுறை ஓவியர் கோ பெங் குவாங், 85, தமது படைப்புகளில் சீன பாணியைக் கையாண்டாலும் ஒரு சிலவற்றில் இந்திய வாசனை மணக்கவே செய்கிறது எனலாம்.
அத்தகைய படைப்புகளில் ஒன்றான 'இந்தியா' என்ற ஓவியம், இன்று முதல் தொடங்கும் திரு கோவின் கண்காட்சியில் இடம்பெறுகிறது. உள்ளூர்க் காட்சிகளைக் கொண்ட ஓவியங்களுடன் 2015ல் இந்தியா சென்ற திரு கோ, அங்கு தாம் கண்ட வண்ணங்களின் கலவையால் பரவசம் அடைந்ததாகக் கூறினார்.
"ஜோத்பூர் என்னை மிகவும் கவர்ந்தது. எனக்குப் பிடித்தமான நிறம் நீலம் என்பதால் 'நீல நகரம்' என அழைக்கப்படும் அந்த இடம் எனக்கு இதமளித்தது," என்று அவர் கூறினார்.
கலாசார பதக்கத்தை 1989ஆம் ஆண்டில் பெற்ற திரு கோ, தமது 85 படைப்புகளை #GBK85 ஓவியக் கண்காட்சியில் காட்சிக்கு வைத்துள்ளார். நேற்று அதிபர் ஹலிமா யாக்கோப் அதிகாரபூர்வமாக இக்கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
கற்பனைத்திறன் சார்ந்த சாதனைகளைத் தொடர்ந்து நிகழ்த்தி வரும் திரு கோ, சிங்கப்பூரைப் பெருமைப்படுத்தி உள்ளதாகவும் பல தலைமுறையினருக்கு உற்சாகம் தந்துள்ளதாகவும் திருவாட்டி ஹலிமா பாராட்டினார்.
கான்கோர்டு சென்டென்னியல் ஹோட்டலில் இக்கண்காட்சி இம்மாதம் 29ஆம் தேதிவரை நடைபெறும். ஹோட்டலின் ஆறாவது மாடியில் அமைந்துள்ள அறைகளில் கண்காட்சி ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன.
திரு கோவின் படைப்புகள் 120க்கும் மேற்பட்ட வெளிநாட்டுக் கண்காட்சிகளில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி: கி. ஜனார்த்தனன்