புற்றுநோயால் இழந்த உறவுகளை மீட்டுத் தந்த அறுவை சிகிச்சை

3 mins read
e721fb9f-8c4c-44f1-a80c-d28b28443877
முதல் அறுவை சிகிச்சை நடந்த அடுத்த நாளன்று தம் பிறந்தநாளை தம்முடைய பராமரிப்புக் குழுவுடன் திரு மைதீன் கொண்டாடினார். படம்: திரு மைதீன் சடையன் -

மாதங்கி இளங்­கோ­வன்

மனைவி, பிள்­ளை­க­ளு­டன் 15 ஆண்­டு­கள் மகிழ்ச்­சி­யாக வாழ்ந்து­வந்த திரு சடை­யன் அக­மது மைதீன் ஜபார், 48, திடீ­ரென்று 2020ல் அதே மனைவி, பிள்­ளை­களைத் தாக்­க­வும் வார்த்­தை­க­ளால் புண்­ப­டுத்­த­வும் தொடங்­கி­னார்.

கொவிட்-19 கொள்­ளை­நோய் சூழ­லில் வீட்­டி­லி­ருந்­த­வாறு தாம் வேலை செய்­யத் தொடங்­கி­ய­தால் மன அழுத்­தம் கார­ண­மாக தம் குணத்­தில் இந்த மாற்­றம் ஏற்­பட்­டி­ருக்­க­லாம் என்று அவர் நினைத்­துக்­கொண்­டார்.

அவர் நடந்­து­கொண்ட விதத்­தைத் தாங்காது பெயர் குறிப்­பிட விரும்­பாத அவ­ரின் மனைவி, 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்­தில் மண­வி­லக்கு கோரி­னார். அதையடுத்து பிள்­ளை­க­ளு­டன் திரு மைதீ­னி­ட­மி­ருந்து வில­கியும் சென்று­விட்­டார்.

தனி­யாக வாழ்ந்து வந்த நிலை­யில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமது பூனை­க­ளுக்கு உணவு ஊட்­டிக்­கொண்­டி­ருந்­த­போது திரு மைதீனுக்­குத் திடீ­ரென வலிப்பு ஏற்­பட்­டது. அவ­ருக்கு அடுத்­த­டுத்து வலிப்பு ஏற்­ப­டும்­போ­தெல்­லாம் தலை­வ­லி­யும் வந்­தது. வலிப்பு வந்­த­போது கண்­பார்வை சுமார் 20 வினா­டி­க­ளுக்­குச் சரி­யா­கத் தெரி­யா­மல் போனது. இந்­தப் பிரச்­சினை கிட்­டத்­தட்ட இரண்டு வாரங்­களுக்கு நீடித்­தது.

தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னை­யில் திரு மைதீ­னின் இத­யம், நுரை­யீ­ரல் ஆகி­ய­வற்­றைப் பரி­சோ­தித்­துப் பார்த்­த­தில் வழக்­கத்­திற்கு மாறாக எது­வும் தென்­ப­ட­வில்லை. இருப்­பி­னும் வீட்­டில் திரு மைதீ­னின் மாறு­பட்ட நட­வ­டிக்­கை­களைப் பற்றி அறிந்­தி­ருந்த அவ­ரின் மருத்­து­வ­ரும் இணைப் பேரா­சி­ரி­ய­ரு­மான யோ செங் சாய், திரு மைதீ­னின் மூளை­யைப் பரி­சோ­தித்­துப் பார்க்­கத் தீர்­மா­னித்­தார்.

அதில் மூன்று செண்­டி­மீட்­டர் அள­வில் புற்­று­நோய் அறி­கு­றி­யுடைய கட்டி ஒன்­றைக் கண்­டு­பிடித்­தார்.

கோபம், அச்­சம், வன்­முறை எண்­ணம் போன்ற ஒரு­வ­ரின் உணர்ச்­சி­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­தும் பகு­தி­யான 'அமிக்­டாலா'வை அவ­ருக்கு ஏற்­பட்­டி­ருந்த மூளைப் புற்று­நோ­யான 'கிளி­யோ­ப­ளஸ்­டோமா (glioblastoma) பாதித்­தி­ருப்­பது தெரிய வந்­தது. தாம் என்ன செய்­கி­றோம் என்­பதை அறிந்­து­கொள்ள முடி­யாத நிலை­யில் திரு மைதீன் 'ஒரு மிரு­கத்­தைப் போல் நடந்­து­கொள்ள' இந்­தப் புற்­று­நோய் கார­ண­மாக இருந்­துள்­ள­தாக பேரா­சி­ரி­யர் யோ குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரில் 100,000 பேரில் மூன்று பேரைப் பாதிக்­கும் இந்­தப் புற்­று­நோய்க்கு மருந்து ஏது­மில்லை.

மேலும், மிக வேக­மாக வள­ரக்­கூ­டிய கட்டி, ஆரம்­பக் கட்­டத்­தில் எந்த ஓர் அறி­கு­றி­யை­யும் காட்­டாது.

தம் மூளை­யில் கட்டி இருப்­பதை அறிந்­த­தும் திரு மைதீன் இடிந்து போனார். தமக்கு இருக்­கும் பிரச்­சி­னை­யைப் பற்றி இணை­யத்­தில் வாசிக்க வாசிக்க, தம் மன­ந­லம் பாதிக்­கப்­பட்­ட­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார். இருப்­பி­னும் பேரா­சி­ரி­யர் யோவின் ஆலோ­ச­னைக்கு இணங்கி கடந்த ஆண்டு ஜூலை மாதத்­தில் திரு மைதீன் இரண்டு அறுவை சிகிச்­சை­க­ளைச் செய்­து­கொண்­டார்.

கட்­டியை அகற்­றிய பின்­னர், தொடர்ந்து கீமோ­தெ­ரபி சிகிச்­சைக்­கும் திரு மைதீன் சென்று வரு­கிறார். அறுவை சிகிச்­சைக்­குப் பிறகு அவ­ரி­டம் உட­னடி மாற்­றம் தெரிந்­ததை அவரே உணர்ந்­தார். மனைவி, பிள்­ளை­க­ளி­டம் தாம் முன்பு நடந்­து­கொண்ட விதத்­திற்கு மூளை­யில் இருந்த கட்­டியே கார­ணம் என்­பதை அவர் உணர்ந்­தார்.

'என் மனை­வியை ஏன் பிரிந்­தேன்' என்ற கேள்­வியை அவர் முணு­மு­ணுக்­கத் தொடங்­கி­னார். தொடக்­கத்­தில் குடும்­பத்­தா­ரிடம் தம் நிலை­யைப் பற்றி கூற விரும்­பாத திரு மைதீன், பின்­னர் மனம் மாறி தன் பிரச்­சி­னை­யைப் பற்றி பகிர்ந்­து­கொண்­டார்.

திரு மைதீ­னுக்கு நடந்­ததை அறிந்­த­தும் அவ­ருக்­குத் துணை­யாக நிற்­கத் தயா­ராக இருந்­தார், அவ­ரின் முன்­னாள் மனைவி. கீமோ­தெ­ரபி சிகிச்­சைக்கு அழைத்­துச் செல்­வது, திரு மைதீ­னைப் பரா­ம­ரிப்­பது என அவ­ரின் முன்­னாள் மனைவி ஆத­ர­வுக்­க­ரம் நீட்­டி­னார்.

இரு­வ­ருக்­கும் இடையே மீண்­டும் அன்பு மலர்ந்­ததை அடுத்து கடந்த மாதம் இரு­வ­ரும் திரு­மண உற­வில் மீண்­டும் இணைந்­த­னர்.

இதற்­கி­டையே திரு மைதீ­னுக்கு மீண்­டும் புற்­று­நோய் ஏற்­படும் சாத்­தி­யம் உண்டு என்று பேரா­சி­ரி­யர் யோ குறிப்­பிட்­டார். இருப்­பி­னும் வாழ்க்­கையை ரசிக்­கத் தொடங்கி­உள்­ளார் திரு மைதீன்.

எதிர்­கா­லத்­தைப் பற்றி அதி­கம் திட்­ட­மி­டா­மல் அன்­றைய தினத்­தில் மனைவி, பிள்­ளை­க­ளு­ட­னான தம் நேரத்தை இன்­ப­மா­கக் கழிப்­ப­தில் அவர் கவ­னம் செலுத்தி வரு­வ­தாக தெரி­வித்­தார்.