உடற்குறை உள்ளவர்களுக்கும் அவர்களின் பராமரிப்பாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கும் கூடுதல் ஆதரவு வழங்கும் வகையில் புதிய மையம் ஒன்றை 'எஸ்ஜி எனேபல்' திறந்து வைத்துள்ளது.
இந்த மையத்தின் மூலம் பயிற்சி வகுப்புகளையும் இதர சேவை களையும் மேலும் எளிதாக நாட முடியும்.
புதிதாகத் திறந்து வைக்கப்பட்டு உள்ள இந்த 'எனேபலிங் அகாடமி', 'எஸ்ஜி எனேபல்' மற்றும் 36 பங்காளி அமைப்புகளின் முயற்சிகளை ஒருங்கிணைத்திடும்.
வேலை நியமனத்திற்கு உடற்குறை உள்ளவர்கள் தகுதிபெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தரும் வகையில் மின்னிலக்க விளம்பரம், கணக்கியல் போன்ற துறைகள் தொடர்பான பயிற்சி வகுப்புகள் இலவசமாகவும் சலுகைக் கட்டணத்திலும் வழங்கப்படும்.
நேர நிர்வாகம், சமையல் போன்ற அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான திறன்களை உடற்குறை உள்ளவர்கள் கற்றுக்கொள்ளவும் பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுகின்றன.
புதிய மையத்தை நேற்று லெங்கோ பாருவில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா திறந்துவைத்தார்.
"வேலைக்கு அமர்த்தக்கூடிய தகுதியைப் பெறவும் அதைத் தக்க வைத்துக்கொள்ளவும் தேவையான திறன்களை உடற்குறை உள்ளவர்கள் பெற வேண்டும். அதற்கான பயிற்சி வாய்ப்புகளை நாம் உருவாக்கித் தரவேண்டும்.
"அப்போதுதான் உடற்குறை உள்ளவர்கள் தங்களின் ஒவ்வொரு வாழ்க்கைக் கட்டத்திலும் தேவையான கற்றல் வாய்ப்புகளை நாட எளிதாக இருக்கும். முதலாளிகள் மற்றும் பங்காளி அமைப்புகளும் தங்களின் திட்டங்களை ஒருங்கிணைப்பதும் எளிதாகிவிடும்," என்று அவர் கூறினார்.
புதிய மையத்தின் இணையத்தளம் வழி உடற்குறை உள்ளவர்களின் பராமரிப்பாளர்களும் அவர்களின் முதலாளிகளும் தகுந்த பயிற்சி வகுப்புகளைத் தேடலாம்.

