சமய ரீதியான அதன் சொந்த அடையாளத்தை சிங்கப்பூரின் இஸ்லாமிய சமூகம் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதை கொவிட்-19 கொள்ளைநோய் சூழல் உணர்த்தியுள்ளதாக முஃப்தி நஸிருதீன் முகம்மது நசிர் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் சமய ஆசிரியர்களின் தலைமைத்துவத்திலும் இஸ்லாமிய சமூகத்தினர் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றார் அவர். கொள்ளைநோய் தாக்கியதை அடுத்து முதன்முதலாக நடத்தப்பட்ட வருடாந்திர நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் டாக்டர் நஸிருதீன் இவ்வாறு கூறியிருந்தார்.
சிங்கப்பூரின் இஸ்லாமிய சமூகத்தின் நலன் காக்கப்படுவதைச் சமய ஆசிரியர்களே உறுதிசெய்ய வேண்டும் என்று அவர் நினைவுறுத்தினார்.
கொள்ளைநோய் தொடங்கியபோது நிபுணர்களுடன் சமயத் தலைவர்கள் இணைந்து செயல்பட வேண்டியிருந்ததாகவும் புதிய தீர்வுகளைக் கண்டறிய வேண்டியிருந்ததாகவும் அவர் சுட்டினார்.

