அனைத்துலக அளவில் கணினிச்சில்லுக்குத் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், சிங்கப்பூரில் தைவான் கணினிச்சில்லு தயாரிக்கும் நிறுவனம் (டிஎஸ்எம்சி) புதிதாக பல பில்லியன் வெள்ளி மதிப்பிலான ஆலை ஒன்றைக் கட்டும் திட்டத்தில் இருப்பதாக வால் ஸ்திரீட் ஜெர்னல் நேற்று முன்தினம் தெரிவித்தது.
பொருளியல் வளர்ச்சிக் கழகத்துடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்பட்டாலும் இன்னும் உறுதியான முடிவேதும் எடுக்கப்படவில்லை என்று அறியப்படுகிறது.
இந்நிலையில் வால் ஸ்திரீட் ஜெர்னல் வெளியிட்ட அறிக்கையின்படி ஆலை கட்டும் திட்டத்திற்கு சிங்கப்பூர் அரசாங்கம் உதவலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இது குறித்து கழகத்துடன் தொடர்புகொண்டபோது திட்டங்கள் பற்றி நிறுவனங்களுடன் ஆலோசிப்பது தொடர்பான விவரங்களைக் கழகம் வெளியிடாது என்று பேச்சாளர் குறிப்பிட்டார்.
எந்த ஒரு சாத்தியமான திட்டத்தையும் உடனே நிராகரித்துவிட முடியாது என்றும் தற்போதைய நிலவரப்படி சிங்கப்பூரில் ஆலை ஒன்றைக் கட்டுவது தொடர்பில் உறுதியான திட்டம் ஏதும் நிறுவனத்திற்கு இல்லை என்றும் 'டிஎஸ்எம்சி' குறிப்பிட்டுள்ளது.
உலகிலேயே ஆக அதிகமான கணினிச்சில்லுகளைத் தயாரிக்கும் நிறுவனமாக 'டிஎஸ்எம்சி' விளங்குகிறது. நிறுவனம் அதன் வருவாயின் கால்பகுதியை 'ஆப்பிள்' நிறுவனத்தின் மூலம் ஈட்டுகிறது.
விநியோகத் தொடர் பிரச்சினைகள், தேசிய பாதுகாப்பு குறித்த கவலைகள் போன்றவற்றுக்கு இடையே அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், சீனா போன்ற பெரும் பொருளியல் நாடுகள் தங்கள் நாடுகளிலேயே கணினிச்சில்லு தயாரிப்பதைக் கொண்டுவருவதற்காக பில்லியன் கணக்கில் சலுகைகள் வழங்குகின்றன.
இந்நிலையில் 'டிஎஸ்எம்சி' அதன் விரிவாக்கத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

