கிட்டத்தட்ட $1.3 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருளை உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மூன்று மலேசிய ஆடவர்களையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையமும் நேற்று இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.
மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட கார் ஒன்றின் வழியாக 28 வயது மலேசிய ஆடவர் ஒருவர் சிங்கப்பூருக்குள் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி வழியாக புதன்கிழமை மாலை நுழைய முயற்சி செய்தபோது, கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
காரின் பின்பகுதியைச் சோதனையிட்டதில் கிட்டத்தட்ட 18 கிலோ போதைப்பொருள் சிக்கியது.
அதையடுத்து பிடோக் நார்த் ஸ்திரீட் 1ல் மற்ற இரண்டு சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் காலை கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருள் அவர்களின் கைகளுக்குச் செல்வதாக இருந்ததெனச் சந்தேகிக்கப்படுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள், சுமார் 8,500 போதைப்புழங்கிகளுக்கு ஒரு வார காலத்திற்கு உட்கொள்வதற்குப் போதுமானது என்று கூறப்பட்டது.
விசாரணை தொடர்கிறது.