புளோக் 2, ஜாலான் புக்கிட் மேராவில் உள்ள குடியிருப்பாளர்கள், கடைக்காரர்கள் ஆகியோர் காசநோய் சோதனை எடுத்துகொள்ளுமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
பிப்ரவரிக்கும் மார்ச்சுக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் இந்தப் புளோக்கில் சேர்ந்த ஏழு பேருக்குக் காசநோய் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குடியிருப்பாளர்களின் வசதிக்காக, அவர்கள் பரிசோதனையை வீட்டிலே செய்துகொள்ளலாம். இச்சோதனை இலவசமாக செய்யப்படும்.
நெருங்கிய தொடர்பு இல்லாதவர்களுக்கு இந்நோய் பரவும் ஆபத்து மிகக் குறைவு என்பதால், இந்த வட்டாரத்துக்கு அவ்வப்போது வருபவர்கள் சோதனை செய்துகொள்ள தேவையில்லை என்று சுகாதார அமைச்சு கூறியது.
காசநோயானது முக்கியமாக நுரையீரலைப் பாதிக்கும் தீவிர தொற்று நோய். இருமல், தும்மல் மூலம் காற்றில் பரவும் சிறிய திரவத் துளிகளால் இந்நோய் பரவுகிறது.
இது அதிகம் பாதிக்கும் தொற்றுநோயாக இருந்தாலும், சிகிச்சை தொடங்கியதும் நோயாளிகள் விரைவாக தொற்றுநோயற்றவர்களாக மாறுகிறார்கள்.