புளோக் 2 ஜாலான் புக்கிட் மேராவில் ஏழு பேருக்கு காசநோய் பாதிப்பு
புளோக் 2 ஜாலான் புக்கிட் மேராவில் வசிக்கும் குடியிருப்பாளர்களையும் அங்குள்ள கடைக்காரர்களையும் காசநோய் பரிசோதனைக்குச் செல்லுமாறு சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இந்தப் பரிசோதனைகள் இலவசமாக நடத்தப்படும் என்று அமைச்சு நேற்று கூறியது. வரும் வெள்ளிக்கிழமை (மே 27) முதல் அடுத்த செவ்வாய்க்கிழமை (மே 31) வரை பரிசோதனை நடத்தப்படும்.
இவ்வாண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கு இடையில் ஏழு பேரிடம் காசநோய் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தப் பரிசோதனை நடத்தப்படும்.
அந்த எழுவரும் அந்த புளோக்கில் ஏழு வெவ்வேறு வீடுகளில் வசிப்பதாக அமைச்சு சொன்னது.
குடியிருப்பாளர்களின் வசதிக்காக, நடமாடும் பரிசோதனைக் குழுக்கள் அவர்களது வீடுகளுக்கே சென்று பரிசோதனை நடத்தும்.
அந்த புளோக்கில் உள்ள கடைகளில் வேலை செய்வோர், புளோக் 3 ஜாலான் புக்கிட் மேராவில் உள்ள வசிப்போர்க் குழு நிலையத்தில் அமைக்கப்படும் பரிசோதனைக் கூடத்திற்குச் செல்லலாம்.
2020ஆம் ஆண்டு அக்டோபரில் இருந்து புளோக் 2 ஜாலான் புக்கிட் மேராவில் வேலை செய்து அல்லது வசித்து வந்தோரை ஜூன் மாதத்திலிருந்து சுகாதார அமைச்சு தொலைபேசியில் தொடர்புகொள்ளும். மோல்மின் சாலையில் உள்ள காசநோய்க் கட்டுப்பாட்டுப் பிரிவில் அவர்களுக்குப் பரிசோதனை செய்யப்படும்.
2020 அக்டோபரில் இருந்து அந்த புளோக்கில் வசித்து வந்த முன்னாள் குடியிருப்பாளர்கள், பரிசோதனை செய்துகொள்ள விரும்பினால் 6258 4430 எனும் எண்ணில் காசநோய்க் கட்டுப்பாட்டுப் பிரிவைத் தொடர்புகொள்ளலாம்.
காசநோயால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களிடமிருந்து அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இல்லாதவர்களுக்கு காசநோய் பரவும் அபாயம் மிகவும் குறைவு என்று சுகாதார அமைச்சு கூறியது.
சம்பந்தப்பட்ட அந்த புளோக்கிற்கும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் அவ்வப்போது சென்றுவருவோருக்குப் பரிசோதனை தேவைப்படாது என்றும் அமைச்சு சொன்னது.