மத்திய நீர்ப்பிடிப்பு இயற்கை வனப்பகுதியில் உள்ள காடுகளை நீண்டகாலத்திற்குக் கண்காணிக்கும் ஆய்வு ஒன்றை ஆய்வாளர்கள் தொடங்கியுள்ளனர்.
காடுகளைப் பாதுகாக்கும் முயற்சிகளை அதிகாரிகள் மேம்படுத்த இது உதவும் என்று தேசியப் பூங்காக் கழகம் நேற்று தெரிவித்தது.
அந்த இயற்கை வனப்பகுதியில் உள்ள 62 காட்டுப்பகுதிகளை அடையாளமிடுவதும் இந்த ஆய்வில் அடங்கும். கடைசியாக 1992ல் இந்த வனப்பகுதியில் ஆய்வு செய்யப்பட்டிருந்தது.
இந்தக் காட்டுப்பகுதிகளில் தாவரங்களும் வனவிலங்குகளும் காலப்போக்கில் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் இந்த ஆய்வின் இடைக்கால முடிவுகளைப் பகிர தேசியப் பூங்காக் கழகம் இலக்கு கொண்டுள்ளது.
இதுகுறித்து பூமலையில் நேற்று பேசிய தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, "இயற்கை வனப்பகுதியில் உள்ள காடுகள் கடந்த 30 ஆண்டுகளில் எப்படி வளர்ந்து உருமாறியுள்ளன என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஆய்வின் முடிவுகள் உதவும்," என்று கூறினார்.
மத்திய நீர்ப்பிடிப்பு இயற்கை வனப்பகுதி, சிங்கப்பூரின் மதிப்புமிக்க பல்லுயிர்ப் பகுதிகளில் ஒன்றாக விளங்குவதை அமைச்சர் லீ சுட்டினார். அங்குள்ள ராட்சதக் காட்டு மரங்களும் சதுப்புநிலங்களும் சிறப்பம்சங்கள்.