அவசர மருத்துவ சிசிச்சை தேவைப்படும் ஒருவர் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பு அவருக்கு அளிக்கப்படும் பராமரிப்பின் தரத்தை மேம்படுத்த புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பக்கவாதம், இதயத்துடிப்பு நின்றுபோவது போன்ற அவசர நிலையை எதிர்நோக்குவோர் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பு அவர்களுக்கு அளிக்கப்படும் முதற்கட்ட மருத்துவ உதவி முக்கியமானதாகும். மருத்துவ அவசரநிலை பல நேரங்களில் வீட்டிலோ வேலையிடத்திலோ ஏற்படுவதால், உயிர்களைக் காப்பதில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துவதோடு, நோயாளிகளின் மருத்துவ நிலை மேம்படுவதையும் இத்திட்டம் உறுதிசெய்யும். தென்கிழக்காசியாவிலேயே முதன்முறையாக இடம்பெறும் இந்த மூன்றாண்டுத் திட்டத்தை சிங்ஹெல்த் குழுமமும் தெமாசெக் அறநிறுவனமும் நேற்று தொடங்கி வைத்தன.
இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 250 பங்கேற்பாளர்களுக்கு இத்திட்டத்தில் பயிற்சி அளிக்கப்படும்.
நேற்று தொடங்கி ஐந்து நாள்களுக்கு நீடிக்கும் இத்திட்டம், இணையத்திலும் சிங்கப்பூர் பொது மருத்துவமனையிலும் நடத்தப்படும். மேலும் மூன்று நாள் பயிற்சி ஒவ்வொரு பங்காளித்துவ நாட்டிலும் நடத்தப்படும்.
தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள், சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள், மருத்துவ ஊர்தி ஊழியர்கள், சமூக அமைப்புத் தலைவர்கள் உள்ளிட்டோர் இந்தப் பங்கேற்பாளர்களில் அடங்குவர்.
அவர்களில் ஏறக்குறைய 30 பேருக்குக் கூடுதல் பயிற்சி அளிக்கப்படும். சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் இத்திட்டத்தை நேற்று தொடங்கிவைத்தார் சுகாதார, மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூன்.
"பயற்சிக்கு அப்பாற்பட்டு, பங்காளித்துவ நாடுகளுக்கு இடையே சிறந்த நடைமுறைகளைப் பகிர்வதோடு அவற்றுக்கு இடையில் கூட்டு முயற்சியையும் இத்திட்டம் ஊக்குவிக்கும்," என்றார் அவர்.