பிரதமர் லீ சியன் லூங், ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திரு ஆண்டனி அல்பனிசிற்கு பாராட்டுக் கடிதம் அனுப்பியுள்ளார்.
ஆஸ்திரேலியத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திரு லீ நேற்று தமது பாராட்டுக் கடிதத்தை அனுப்பினார்.
பிரதமர் தமது கடிதத்தில், சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான உறவுகளைத் தொடர்ந்து மேம்படுத்துவது குறித்துத் திரு அல்பனிசுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகால உறவுகளுடன் விரிவான உத்திபூர்வ பங்காளித்துவத்துக்கான அம்சங்களில் வலுவான ஒத்துழைப்பும் நிலவுவதைத் திரு லீ சுட்டினார்.
பசுமைப் பொருளியல் போன்ற புதிய துறைகளிலும் இரு தரப்பும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தியிருப்பதைத் தமது கடிதத்தில் குறிப்பிட்ட பிரதமர், வருடாந்தர சிங்கப்பூர்-ஆஸ்திரேலியத் தலைவர்கள் சந்திப்பை ஒட்டி ஆஸ்திரேலியப் பயணம் மேற்கொள்வதை எதிர்நோக்குவதாகவும் கூறினார்.
சந்திப்பில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்துக் கலந்துரையாடவும், வட்டார, உலகளாவிய விவகாரங்கள் குறித்துக் கருத்துப் பரிமாறிக்கொள்ளவும் திரு லீ விருப்பம் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் ஆண்டனி அல்பனிசிற்கு நல்ல உடல்நலத்துடன் அவரது முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டவும் பிரதமர் லீ வாழ்த்து தெரிவித்தார்.

