சிங்கப்பூரில் கடந்த பத்து ஆண்டுகளில் நான்கு சம்பவங்களில் காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்த நேரிட்டது; அவற்றில் இரண்டு இந்த ஆண்டுத் தொடக்கத்தில் நடந்தவை.
பல்வேறு பலப் பிரயோக உத்திகளைத் திறம்படப் பயன்படுத்துவது தொடர்பில் காவல்துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சி குறித்து செய்தியாளர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பயிலரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த வியாழக்கிழமை நடந்த பயிலரங்கில், அதிகாரிகள் பயிற்சித் தளபத்தியத்தைச் சேர்ந்த காவல்துறைக் கண்காணிப்பாளர் டோ பெய் லியான் உரையாற்றினார்.
பலத்தைப் பயன்படுத்த வேண்டிய சூழலில் அதிகாரிகள் பொதுவான சில அம்சங்களில் கவனம் செலுத்தவேண்டும் என்றார் அவர்.
அச்சுறுத்துபவர் எந்த அளவு மிரட்டலாக விளங்குகிறார், பொதுமக்களின் பாதுகாப்பு, சக அதிகாரிகளின் பாதுகாப்பு இவற்றுடன் அச்சுறுத்துபவரின் பாதுகாப்பையும் கருத்தில்கொண்டே எந்த அளவு பலத்தைப் பயன்படுத்தலாம் என்று முடிவெடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
கைது செய்யும்போதோ உயிருக்கோ உடைமைக்கோ சேதம் ஏற்படும் என்ற நிலையிலோ அதிகாரிகள் தேவைப்பட்டால் மட்டுமே பலப் பிரயோகம் செய்வர் என்று தெரிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் தீங்கு நேராமல் தடுப்பதும் நிலைமையக் கட்டுக்குள் கொண்டுவருவதுமே இதற்கான காரணம் என்று கண்காணிப்பாளர் டோ குறிப்பிட்டார்.
கடுமையான காயம் அல்லது மரணம் விளைவிக்கக்கூடிய ஒருவரைத் தடுத்து நிறுத்த உடலின் நடுப்பகுதியில் சுடுவதற்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
50,000 வோல்ட் மின்சாரத்தைப் பாய்ச்சக்கூடிய 'டேசர்' கருவிகள், துப்பாக்கிகள், தடுப்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் முறைகளுடன் அச்சுறுத்துபவரை முடக்கக்கூடிய சில பயிற்சிகளும் ஆறு மாத அடிப்படைப் பயிற்சியின்போது அதிகாரிகளுக்குக் கற்றுத்தரப்படுகின்றன.
நிலைமையை மதிப்பிட்டு பொதுமக்களுக்கோ பணியில் உள்ள அதிகாரிகளுக்கோ தீங்கு நேராத வண்ணம், உரிய முடிவெடுத்து அவர்கள் தங்கள் கடமையை ஆற்றுவர் என்று தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர்க் காவல்படை, அதிகாரிகளுக்கான அதன் பயிற்சித் திட்டங்களையும் நடைமுறைகளையும் தொடர்ந்து மறுஆய்வு செய்வதாகவும் கூறப்பட்டது.

