சிங்கப்பூரில் இந்த மாதம் வங்கித்துறை மோசடியில் 10 பேருக்கு மேல் எழுபதாயிரம் வெள்ளிக்கும் அதிகமான தொகையை இழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துவருவதாகக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தொலைபேசி அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் மூலம் தொடர்புகொண்ட மோசடிக்காரர்கள் வங்கி அதிகாரிகளைப் போல நடித்து ஏமாற்றியதாக அது குறிப்பிட்டது.
வங்கி அட்டை விவரங்கள் ஊடுருவப்பட்டிருக்கலாம் என்று கூறி பின்னர் வங்கிக் கணக்கு விவரங்களை அவர்கள் கேட்பர். அதைத் தொடர்ந்து 'ஓடிபி' எனப்படும் கடவு எண்ணையும் கேட்டுத் தெரிந்துகொள்வர்.
தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து அனுமதியற்ற பணப் பரிவர்த்தனைகள் இடம்பெற்றது தெரியவந்த பிறகே பாதிக்கப்பட்டோர் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்துகொண்டனர்.
பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும்படியும் வங்கிக் கணக்கு அல்லது அட்டை தொடர்பான விவகாரங்களுக்கு அந்தந்த வங்கியின் அதிகாரபூர்வ இணையத்தளத்தை நாடும்படியும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. தவறான பரிவர்த்தனைகள் குறித்து வங்கிக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கும்படியும் அது ஆலோசனை கூறியது.
இத்தகைய மோசடிகள் குறித்த தகவல் அறிந்தோர் 1800-255-0000 என்ற 24 மணி நேரத் தொலைபேசி எண்ணில் காவல்துறைக்குத் தகவல் அளிக்கலாம். அவசர உதவி தேவைப்பட்டால் 999 என்ற எண்ணையும் அழைக்கலாம்.
ஆர்வமுள்ளோர் காவல்துறையின் 'ஸ்பாட் த சைன்ஸ். ஸ்டாப் த கிரைம்ஸ்' எனும் மோசடித் தடுப்புப் பிரசார இயக்கத்தில் இணையலாம். அண்மைய தகவல்களை அதில் பெற்றுக்கொண்டு அவற்றை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ள அவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

