ரோகனுக்கு கிரிக்கெட் விளையாட்டு எட்டு வயதில் அறிமுகமானபோது, அது தன்னையும் தன் அம்மாவையும் பெரிதளவில் ஈர்த்துவிடும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. பதினான்கு வயதில் தேசிய சிங்கப்பூர் ஆண்கள் கிரிக்கெட் அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ரோகனை கிரிக்கெட் பயிற்சிகளில் விட்டுச் சென்றுகொண்டிருந்த ரோகனின் அம்மா திருமதி மாலினியையும் அந்த ஆர்வம் விட்டுவைக்கவில்லை. ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்கு திருமதி மாலினி தேசிய பெண்கள் கிரிக்கெட் அணியில் விளையாடினார்.
"அம்மாவும் நானும் சேர்ந்து பயிற்சி செய்திருக்கிறோம். அவரிடம் இருந்த உற்சாகம், என் கிரிக்கெட் பயணத்திற்கு வித்திட்டது. கிரிக்கெட்டுக்கும் முக்கியத்துவம் கொடுப்பேன் என்று நான் கூறியபோது அவர் என் முடிவுக்கு ஆதரவளித்தார்," என்கிறார் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத் துறையில் பயிலும் 22 வயது ரோகன் ரங்கராஜன்.
கடந்த 2019ல் ஆண்களுக்கான 'ஐசிசி டி20' (ICC T20) உலகக் கிண்ணத் தேர்வுச் சுற்றுகளில் சிங்கப்பூர் ஆண்கள் கிரிக்கெட் அணி தோல்வியைத் தழுவியது. வெற்றி நெருங்கி வரும் சமயத்தில் அந்த வாய்ப்பு தட்டிப்பறிக்கப்பட்டதில் வருத்தமிருந்தாலும் உலக அணிகளுடன் விளையாடிய அனுபவத்திலிருந்த படிப்பினைகள் ஏராளம் என்கிறார் ரோகன். இத்தகைய அனுபவங்கள் தன்னை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றுள்ளதாகவும் கூறுகிறார் தொடக்க பேட்ஸ்மேனாக விளையாடும் ரோகன். ஒழுக்கத்தை விதைத்து, உறுதியுடன் உழைப்பதை கிரிக்கெட் மூலம் இவர் கற்றார். இந்த ஆண்டு சிங்கப்பூர் அணி எதிர்நோக்கி உள்ள நான்கு கிரிக்கெட் போட்டிகள், குறிப்பாக, ஜூலை மாதம் இடம்பெறும் உலகக் கிண்ணத் தேர்வுச் சுற்றுகளுக்காக தான் கடுமையாக உழைத்து வருவதாக ரோகன் கூறுகிறார்.