சிங்கப்பூரின் ஆக இளைய ஐஸ் ஹாக்கி விளையாட்டாளரான முத்துக்குமார் கார்த்திகேயன், நாட்டின் முதல் ஐஸ் ஹாக்கி வெண்கலப் பதக்கத்தை இவ்வாண்டு வென்றார். இந்த இனிதான வெற்றியைத் தனது அணியுடன் கொண்டாடினார் இவர். கிர்கிஸ்தானின் பிஷ்கேக் நகரில் நடைபெற்ற 2022 உலக சாம்பியன்ஷிப் டிவிஷன் நான்கு, சர்வதேச ஐஸ் ஹாக்கி போட்டியே சிங்கப்பூர் அணியின் முதல் ஐஸ் ஹாக்கிப் போட்டி.
"தாய்நாட்டை இந்த இளம் வயதில் பிரதிநிதித்த அனுபவம் என் வாழ்வில் முக்கிய மைல்கல் ஆகும். இந்த அனுபவம் என் வளர்ச்சிக்கு முக்கியமானது," என்று நெகிழ்ச்சி யுடன் கூறுகிறார் கார்த்திக். எட்டு வயதில் பொழுதுபோக்காகக் கற்றுக்கொள்ளத் தொடங்கிய விளையாட்டு, இன்று தன்னை உலக
மேடைக்கு அழைத்துச் சென்று தன் அடையாளமாகவே மாறிவிட்டதாக பெருமிதத்துடன் கூறுகிறார்.
ஆங்கிலோ சீன தன்னாட்சிப் பள்ளியில் பயிலும் 16 வயது
கார்த்திகேயன், 2021ஆம் ஆண்டில் தேசிய ஆண்கள் ஐஸ் ஹாக்கி அணியில் சேர்க்கப்பட்டபோது தன் கனவு நனவானது என்கிறார். சக விளையாட்டாளர்களின் மன உறுதியும் ஒற்றுமையும் இவருக்குப் படிப்பினையாக அமைந்தன.
அணியின் திறனைக் காட்டிலும் முக்கியமாக, ஒற்றுமையே அணியின் வெற்றியையும் தோல்வியையும் நிர்ணயிக்கிறது என்பதையும் அவர் உணர்ந்தார். காலை ஆறு மணிக்குப் பள்ளிக்குச் செல்லத் தயாராகும் கார்த்திகேயன், இரவு 11 மணிக்குப் பின்னரே வீடு திரும்புவார். நேரக்கட்டுப்பாடும் சாதிக்கும் துடிப்புமே இவர் தனது பொறுப்புகளைச் சிறப்பாக ஆற்றும் திடத்தை அளித்துள்ளதாக இவர் பகிர்ந்துகொண்டார்.
தனக்கு நண்பராகத் துணை நிற்கும் தந்தையும் நிதானத்துடன் தன்னைக் கவனித்துக்கொள்ளும் அன்னையும் தன் பயணத்தின் ஒவ்வோர் அடியிலும் பக்கபலமாக இருந்து வருவதாக கார்த்திகேயன் பகிர்ந்துகொண்டார்.

