விளையாட்டு என்றாலே அதை ஒரு கை பார்க்காமல் விடமாட்டார் ரீனா. பூப்பந்து, டேக்வாண்டோ, கோல்ஃப், தற்காப்புக் கலை எனப் பல்வேறு விளையாட்டுகளைப் பள்ளி நடவடிக்கையாகவும் பொழுதுபோக்காகவும் இவர் மேற்கொண்டார். ஒருநாள் வலைப்பந்து விளையாட்டு அவருக்கு அறிமுகமானது. அதன் மீது ஏற்பட்ட மோகம் இன்னும் தீரவே இல்லை என்று கூறுகிறார் ரீனா.
"வலைப்பந்து உடல் சார்ந்த ஒரு விளையாட்டு மட்டுமன்று. எதிரணியினரை எடை போடு
வதும் அடுத்தடுத்த கட்டங்களைத் தீர்மானிப்பதும் மிக முக்கியம். ஒவ்வொரு போட்டியும் ஒரு புது அனுபவம்," என்கிறார் கோல் காப்பாளராக விளையாடும் ரீனா திவ்யா மனோகரன், 23.
பலதுறைத் தொழிற்கல்லூரி நாள்களில் விளையாட்டு அணியில் சேராமல் கல்வியில் கவனம் செலுத்த முடிவெடுத்தார் ரீனா. அச்சமயத்தில் பள்ளி வலைப்பந்து பயிற்றுவிப்பாளர் தன்னை அவ்விளையாட்டின் பக்கம் ஈர்க்க முயன்றதை நினைவுகூர்கிறார் இவர். வலைப்பந்து விளையாட்டில் இறங்கி ஐந்து ஆண்டுகளே ஆன ரீனா, கடந்த நான்கு ஆண்டுகளாக தேசிய வலைப்பந்து அணியில் பயிற்சி பெறுகிறார்.
"சக விளையாட்டாளர்களுடன் தினந்தோறும் உழைத்து, அதன் பயனை நேரடியாகக் களத்தில் காண்பது ஓர் இன்பம். ஒரே குடும்பம் என ஆகிவிட்ட என் அணியினருடன் தேசத்துக்காக விளையாடுவது ஓர் அங்கீகாரமே," என்கிறார் ரீனா. 2019ல் இடம்பெற்ற ஆசிய இளையர் வலைப்பந்து போட்டிகளில் தன் முதல் அனைத்துலக களத்தைக் கண்டார். சிம் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் பயிலும் ரீனா, நிரலிடுதல் தொடர்பிலும் பயின்று வருகிறார். நிரலிடுதலும் வலைப்பந்தைப் போல சிந்தித்தலை அதிகம் தூண்டுவதாகக் கூறும் இவர், அதையே தன் வாழ்க்கைத்தொழிலாக அமைத்திடத் திட்டமிடுவதாகவும் பகிர்ந்துகொண்டார்.

