'பிடிஓ' வீட்டுத் திட்டம் தாமதம்; இழப்பீடு பெறும் உரிமையாளர்கள்
செங்காங் வட்டாரத்தில் தேவைக்கேற்ப கட்டப்படும் 'ஆங்கர்வேல் வில்லேஜ்' வீடுகளின் கட்டுமானப் பணி நிறைவடையத் தாமதமாவதால், வீட்டு உரிமையாளர்களுக்கு வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் இழப்பீட்டுத் தொகை வழங்கவிருக்கிறது.
வீட்டின் பரப்பளவு, ஒப்படைக்கப்படும் தேதி ஆகியவற்றுக்கு ஏற்ப உரிமையாளர்களுக்கு $2,270 முதல் $6,360 வரை ஒருமுறை மட்டும் வழங்குதொகை அளிக்கப்படும்.
முன்னதாக 'ஆங்கர்வேல் வில்லேஜ்' வீடுகளை இந்த ஆண்டின் முதல் காலாண்டில் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதம்தான் பணிகள் நிறைவடையும் என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாக்களை மீண்டும் தொடங்கத் தயாராகும் பள்ளிகள்
கொவிட்-19 தொடர்பான பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சிங்கப்பூர்ப் பள்ளிகள் வெளிநாட்டுக் கல்விச் சுற்றுலாக்களை மீண்டும் தொடங்கத் தயாராகிவருகின்றன.
இந்நிலையில், பயணம் தொடர்பான தகவல்களையும் ஆலோசனைச் சேவைகளையும் வழங்கக்கூடிய நிறுவனத்தைப் பணியில் அமர்த்த கல்வி அமைச்சு ஆலோசித்து வருகிறது.
உள்ளூர், வெளிநாட்டுக் கல்விப் பயணங்களில் சுகாதாரம், மருத்துவம், அவசர உதவி, பாதுகாப்பு ஆலோசனை போன்றவை தொடர்பான சேவைகளை அந்நிறுவனம் வழங்கும்.
பயணத்தின்போது நேரும் சம்பவங்களில் உதவி தேவைப்பட்டால் அதன் தொடர்பில் கல்வி அமைச்சால் நியமிக்கப்பட்ட காப்புறுதி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும். இணையப்பக்கம், செயலி ஆகியவற்றின் மூலம் பயணத்தைக் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்து தரும் என்று கூறப்பட்டது.

