சிங்கப்பூர் புதிய மருந்துகளை மனிதர்களிடம் சோதிக்கும் வட்டார நிலையத்தை அமைப்பதில் முனைந்துள்ளது.
புதிய சிகிச்சைமுறைகள், மருந்துகள் ஆகியவற்றைச் சிங்கப்பூரர்கள் முன்கூட்டியே பெறுவதற்கு இது வழிவகுக்கும்.
நவீன மருத்துவத்தின் அடிநாதமாக விளங்குவது புதிய மருந்துகளை மனிதர்களிடம் சோதிக்கும் நடைமுறை.
நீரிழிவு, புற்றுநோய், கிருமித்தொற்றுக்கு சிகிச்சை அளிக்க உதவும் 'ஆண்டிபயாட்டிக்' மருந்துகளை ஏற்றுக்கொள்ள இயலாத உடல்நிலை போன்ற பல்வேறு மருத்துவச் சிக்கல்கள் தொடர்பில் உலகெங்கும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றின் விளைவாகக் கண்டுபிடிக்கப்படும் புதிய மருந்துகள் உரிய அங்கீகாரம் பெறுவதற்கு அவை சோதனை அடிப்படையில் மனிதர்களிடம் பரிசோதிக்கப்பட்டிருக்க வேண்டியது அவசியம். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக இத்தகைய பரிசோதனை முறைகளில் கணிசமான மாற்றம் ஏற்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு இந்தச் சோதனைகளில் மருந்துகளைக் கொடுத்துச் சோதிக்கும் அவசியம் இல்லாமலே, குறிப்பிட்ட உடல்நலச் சிக்கல்கள் கொண்டோரைத் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் நோய் உருவாவதற்கான காரணிகள் குறித்துப் புரிந்து கொள்ளலாம்.
பின்னர் அதன் அடிப்படையில் நோய் ஏற்படுவதைத் தவிர்க்க அல்லது நோயின் தீவிரத்தைக் குறைக்க மருந்துகளை எவ்வாறு தருவது, மருந்துகளுக்குப் பதில் குறிப்பிட்ட வாழ்க்கைமுறை மாற்றங்களைப் பரிந்துரைக்கலாமா என்று முடிவெடுக்க இயலும்.
இத்தகைய கண்காணிப்புச் சோதனை முயற்சிகள் நோயாளிகளுக்கு மட்டுமானவை அல்ல.
சில நேரங்களில் ஆரோக்கியமானவர்களும் இவற்றில் பங்கெடுக்கக்கூடும்.