அப்துல் சோமத் பத்துபாரா என்னும் இந்தோனீசிய சமய போதகர் சிங்கப்பூர் அதிகாரிகளால் சில காலம் கண்காணிக்கப்பட்டு வந்ததாக சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதச் சித்தாந்தத்தில் ஈடுபட்டது தொடர்பாக தனிப்பட்ட சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டபோது அவர்கள் இந்த சமய போதகரின் காணொளிகளைக் கண்டதாகத் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து இவரை அதிகாரிகள் கண்காணிக்கத் தொடங்கினர். புலன் விசாரணைக்கு உட்பட்டவர்களில் 2020 ஜனவரியில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்ட 17 வயது நபரும் அடங்குவார்.
"இந்த நபர், சோமத்துடைய இதுபோன்ற யூடியூப் காணொளி வழி போதனைகளினால், தற்கொலைத் தாக்குதலை மேற்கொள்வது தன்னை சொர்க்கத்திற்கு இட்டுச்செல்லும் என்றும் நம்பியுள்ளார். இதுபோன்ற சோமத்தின் பிரசங்கங்கள் உலகளாவிய விளை
வுகளை ஏற்படுத்தக்கூடியவை" என்று அமைச்சர் கூறினார்.
சோமத் பாத்தாமிலிருந்து சிங்கப்பூருக்கு ஆறு பேருடன் புறப்பட்டார். தானா மேரா படகு முனையத்தில் இம்மாதம் 16ஆம் தேதி நுழைவு மறுக்கப்பட்டதையடுத்து, அதே நாளில் பாத்தாமிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
இவரது தீவிரவாத, பிரிவினைவாத போதனைகள் பல இன, பல சமய சிங்கப்பூர் சமூகத்திற்கு ஏற்புடையவை அல்ல என்று அப்போது உள்துறை அமைச்சு தெரிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து ஜகார்த் தாவிலுள்ள சிங்கப்பூர்த் தூதரக வளாகத்திலும் மேடானிலுள்ள சிங்கப்பூர்த் துணைத் தூதரகத்திலும் கடந்த 20ஆம் தேதி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
சிங்கப்பூரில் நுழைவு மறுக்கப்பட்டது முதல் இணையத்தில் இவரது ஆதரவாளர்கள் பதிவேற்றிய கருத்துகளையும் அமைச்சர் வெளிப்படுத்தினார்.
சிங்கப்பூர் குண்டு வைத்துத் தகர்த்தப்பட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
மற்றொரு கருத்து ஃபேஸ்புக்கிலிருந்து நீக்கப்பட்டது. "2001ல் நியூயார்க்கில் நிகழ்ந்த 9/11 தாக்குதலைப் போல உங்கள் நாட்டைத் தாக்குவோம்," என்று ஒரு கருத்து காணப்பட்டது. சிறிய நாடு. ஒரேயொரு ஏவுகணையில் எல்லாம் முடிந்துவிடும்," என்றும் ஒரு கருத்து வெளியிடப்பட்டது.
சிங்கப்பூர் இது போன்ற பிளவு படுத்தும் உரைகள் மற்றும் சித்தாந்தங்களை ஒருபோதும் ஆதரிக்காது. இதற்கு தனிப்பட்ட எந்த ஒரு மனிதருக்கோ, சமயத்திற்கோ, இனத்திற்கோ விதிவிலக்கு அளிக்கப்படாது.
இச்செயல்களில் சிங்கப்பூரின் நிலை அனைவருக்கும் பொதுவானது என்று திரு சண்முகம் கூறினார்.
இதேபோன்று இதற்கு முன் நிகழ்ந்த சம்பவங்களையும் அமைச்சர் நினைவூட்டினார்.
2017ஆம் ஆண்டில் இரண்டு வெளிநாட்டு கிறித்துவ சமய போதகர்களுக்கும் 2018ஆம் ஆண்டு ஓர் அமெரிக்க கிறிஸ்துவ சமய போதகருக்கும் சிங்கப்பூரில் பிரசங்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இவர்கள் பிற சமயங்களைப் பற்றி இழிவான கருத்துகளை கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சில வாரங்களுக்கு முன் இஸ்லாமியர்கள் பற்றிய ஒவ்வாத சித்திரிப்பினால் 'த காஷ்மீர் ஃபைல்ஸ்' என்னும் திரைப்படம் சிங்கப்பூரில் தடைசெய்யப்பட்டது.
சிங்கப்பூர் தனது பாதுகாப்பு மற்றும் சமய நல்லிணக்கத்தைக் கெடுக்கும் எவ்வித செயல்பாடு
களுக்கும் எந்த சூழலிலும் சோமத் போன்றோருக்கு வாய்ப்பு அளிக்காது என்றும் அமைச்சர் கூறினார்.
இந்தோனீசியாவில் பிரபலமான சோமத்தை, இன்ஸ்டகிராமில் 6.5 மில்லியன் பேரும் யூடியூப்பில் 2.7 மில்லியன் பேரும் ஃபேஸ்புக்கில் 700,000 பேரும் பின்பற்றுகின்றனர்.
சண்முகம்: இந்தோனீசிய சமய போதகர் கண்காணிக்கப்பட்டு வந்தார்

