மலிவுக்கட்டண விமான நிறுவனமான ஃபையர்ஃபிளை ஜூன் 13ஆம் தேதியிலிருந்து மலேசியாவுக்கான தனது சேவைகளை மீண்டும் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது.
கொள்ளைநோய்ப் பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த விமானச் சேவை ஈராண்டுகளுக்குப் பிறகு மீள்கிறது.
"நாங்கள் மீண்டும் வந்துவிட்டோம்," என்ற வாசகங்கள் ஃபையர் ஃபிளை இணையத்தளத்தில் நேற்று காணப்பட்டன.
ஜூன் 13 திங்கட்கிழமை முதல் சிங்கப்பூரின் சிலேத்தார் விமான நிலையத்தில் இருந்து இதன் சேவை தொடங்குகிறது. கோலாலம்பூர் அருகே உள்ள சுபாங் செல்வதற்கான ஒருவழிப் பயணக் கட்டணம் 37 வெள்ளியாக (119 ரிங்கிட்) நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
சுபாங்கிலுள்ள சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா விமான நிலையத்திற்கு சிலேத்தாரில் இருந்து ஒவ்வொரு நாளும் இரு விமானச் சேவைகளை ஃபையர்ஃபிளை இயக்கும்.
கொள்ளைநோய்ப் பரவலுக்கு முன்னர் 2019ஆம் ஆண்டுவரை நாள் ஒன்றுக்கு ஆறு விமானச் சேவைகள் நடத்தப்பட்டன. ஏடிஆர்72-500 என்னும் இதன் விமானம் 72 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடியது.
"மலேசிய எல்லை திறக்கப்பட்டிருப்பதால் ஃபையர்ஃபிளை அதன் சேவைகளைத் தொடரவும் சிங்கப்பூர், மலேசிய சமூகங்களை இணைப்பதில் பங்காற்றவும் இது சரியான தருணம்," என்று ஃபையர்ஃபிளை விமான நிறுவன தலைமை நிர்வாகி ஃபிலிப் சீ நேற்று தமது அறிக்கையில் குறிப்பிட்டார்.
$80 மில்லியன் செலவில் வசதி கூட்டப்பட்ட சிலேத்தார் பயணிகள் முனையம் 2019ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
தற்போது ஃபையர்ஃபிளையின் சேவைகளுக்கு உதவ இது தயாராக உள்ளதாக சாங்கி விமானநிலையக் குழுமத்தின் அதிகாரி லிம் சிங் கியட் கூறினார். கொள்ளைநோய்ப் பரவல் காரணமாக ஈராணடுகளாக இந்த விமானநிலையம் செயல்படவில்லை.
"கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான பயணத்திற்கான தேவை வலுவடைந்துள்ளதை அறிகிறோம். இந்த விமான நிலையம் பயணிகளை வரவேற்கத் தயாராக உள்ளது," என்றார் திரு லிம்.
சேவைகள் மீண்டும் தொடங்கினாலும் ஃபையர்ஃபிளை விமானத்திற்குப் போதுமான பயன் கிட்டுமா என்று இன்னும் தெரியவில்லை. கொள்ளைநோய் பரவலுக்கு முன்னரே, விமான இருக்கைகளை நிரப்ப இந்நிறுவனம் சிரமப்பட்டது.
சிங்கப்பூர்-சுபாங் விமானப் பாதை அவ்வளவாகப் பிரபலமடையாத ஒன்று. வழக்கமாக 40 விழுக்காடு விமான இருக்கைகளிலேயே பயணிகள் காணப்படுவர்.
மேலும், இன்னும் ராணுவ விமான நிலையமாகப் பலராலும் கருதப்படும் சிலேத்தார் விமான நிலையம் ஃபையர்ஃபிளை சேவையின் வெற்றிப் பயணத்துக்கு எந்த அளவுக்கு உதவும் என்று தெரியவில்லை.
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில் வான்வெளி தொடடர்பில் நிலவிய இருதரப்பு கருத்து வேறுபாடு காரணமாக 2019ஆம் ஆண்டு கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் சிலேத்தார் விமானநிலையப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

