ஜூரோங்கில் கடன் வழங்கும் நிறுவனத்தில் ஆயுதம் தாங்கிய கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்திற்காக 23 இளையர் ஒருவருக்கு ஐந்தாண்டு, எட்டு மாதம், ஐந்து வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 12 பிரம்படிகளும் $3,000 அபராதமும் விதிக்கப்பட்டன.
கார்த்திக் ஸ்டாலின்ராஜ் என்பவருக்கு ஆயுதந்தாங்கிய கொள்ளையுடன் இதர பல குற்றங்களுக்காகவும் இந்தத் தண்டனைகள் நேற்று விதிக்கப்பட்டன.
கத்திக்குத்து, காவல்துறை அதிகாரி மீது காரி உமிழ்ந்தது, கொள்ளைநோய் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்தபோது மது குடிக்க மற்றவர்களுடன் சேர்ந்து சென்றது, ஜூரோங் சென்ட்ரல் பூங்காவில் தூங்கிக்கொண்டிருந்த ஆடவர் ஒருவரின் உடமைகளைத் திருடியது ஆகியன கார்த்திக் ஈடுபட்ட மற்ற குற்றங்கள்.
2020ஆம் ஆண்டு தீபாவளியைக் கொண்டாடவும் தமது காதலிக்குப் பரிசு வாங்கவும் கார்த்திக்கிற்குப் பணம் தேவைப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதற்காக, 135 ஜூரோங் கேட்வே ரோட்டில் உள்ள 'ஓ.டி. கிரெடிட்' என்னும் கடன் வழங்கும் நிறுவனத்தில் கோட்டா குமார் ஜெஸ்வந்த், 20, துஷ்யேந்தர் சேகரன், 22, ஆகிய தமது நண்பர்
களுடன் சேர்ந்து கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டப்பட்டது.
எப்போதும் இரு பெண்கள் மட்டுமே இருப்பார்கள் என்பதால் இந்நிறுவனத்திற்குக் கும்பல் குறிவைத்தது. 2020 நவம்பர் 19ஆம் தேதி மாலை மூவரும் அந்த நிறுவனத்திற்குள் புகுந்தனர்.
நிறுவனத்தின் மேலாளரான 36 வயதுப் பெண்ணைக் கத்தியைக் காட்டி மிரட்டி அங்கிருந்த பணத்தை அவர்கள் கொள்ளையடித்தனர். கொள்ளைப் பணத்தில் $14,500 காத்திக்கிற்குக் கிடைத்தது.
மூவரும் புத்தாடைகள் வாங்க பூகிஸ் சென்றனர். கார்த்திக் தமது காதலிக்காக ஐஃபோன் 12 புரோ மேக்ஸ் வாங்கினார்.
மறுநாள் அதிகாலை 1.35 மணியளவில் மூவரும் கேலாங் வட்டாரத்தில் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
குற்றச் சம்பவம் நிகழ்ந்தபோது பதின்மவயது என்பதால் கோட்டா, சீர்திருத்தப் பயிற்சிக்கு அனுப்பப்பட்டார். மூன்றாமவரான துஷ்யேந்தருக்கு ஈராண்டு சிறையும் ஆறு பிரம்படிகளும் ஏற்கெனவே விதிக்கப்பட்டன.

