அதிக ஆற்றலுடைய உள்ளூர் நிறுவனங்களின் வளர்ச்சியை துரிதப்படுத்துவதுடன் அவை அனைத்துலக அளவில் விரிவடைய உதவும் 'ஸ்கேல்-அப் எஸ்ஜி' திட்டத்தின் வழியாக 65 நிறுவனங்கள் இதுவரை பலனடைந்துள்ளன.
திட்டம் 2019ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது முதல் இந்த 65 நிறுவனங்களும் புதிதாக 50 திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன. அத்துடன் விரிவடைவதற்காக 32 புதிய சந்தைகளையும் அவை அடையாளம் கண்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக 30க்கும் மேற்பட்ட இணைப்புகள் மற்றும் பற்றுமானங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் 20க்கும் மேற்பட்ட கூட்டணிகள் உருவாக்கப்பட்டதாகவும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.
சேண்ட்ஸ் எக்ஸ்போ மற்றும் மாநாட்டு மையத்தில் நேற்று நடைபெற்ற 'ஸ்கேல்-அப் இக்னைட்' நிகழ்ச்சியில் அவர் இத்தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
திட்டத்தின் கீழ் இணைந்த நிறுவனங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் பட்டத்தொழிலர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்பர்களுக்காக சுமார் 500 வேலைகளை உருவாக்கித் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.