தொழில்நுட்பக் கட்டமைப்புகளுக்கும் இதர முக்கிய உள்கட்டமைப்புகளுக்கும் இடையே அதிகரித்துவரும் தொடர்பு, இணையப் பாதுகாப்புக்கு பெரிய அளவிலான சவால் விடுப்பதாக உலகப் பொருளியல் கருத்தரங்கில் இடம்பெற்ற நிபுணர் குழு ஒன்று கூறியது.
இணையப் பாதுகாப்பு மிரட்டல்கள் அதிகரித்துவரும் நிலையில், அரசாங்கங்களும் வர்த்தகங்களும் மேலும் அணுக்கமாக ஒத்துழைக்க வேண்டும் என்பதை அக்குழு வலியுறுத்தியது.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மின்சக்தி உற்பத்தி போன்ற முக்கிய செயல்பாடுகளை நடத்துவதற்குப் பயன்படும் தொழில்நுட்பத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியதன் தேவையே, பல நிறுவனங்களும் கவனிக்கத் தவறும் ஒரு பெரிய அம்சம் என்றும் நிபுணர் குழு குறிப்பிட்டது. இணையப் பாதுகாப்புக்கு உலகளாவிய தீர்வு தேவை என்று அது கூறியது.