ஐந்து ஆண்டு இடைவேளைக்குப் பிறகு இந்த வாரயிறுதியில் ராணுவ பொது வரவேற்பு நிகழ்ச்சி மீண்டும் நடத்தப்படவுள்ளது. வருகையாளர்கள் ராணுவ மிதவையில் இருந்தவாறு மரினா பே நீர்ப்பகுதியில் கடல்உலா செல்லலாம்.
ராணுவ நடவடிக்கைகளுக்காக பாலங்களை அமைக்க சிங்கப்பூர் ராணுவத்தின் போர்ப் பொறியாளர்கள் 'எம்3ஜி கிராஃப்ட்' எனப்படும் இந்த மிதவையைப் பயன்படுத்துவது உண்டு. மரினா பே நீர்ப்பகுதியில் வருகையாளர்களை அழைத்துச்செல்ல இந்த மிதவைதான் பயன்படுத்தப்படும்.
எஃப்1 பிட் கட்டடத்துக்கு அருகிலுள்ள கரையோரப் பகுதியில் அந்த மிதவையின் பயணம் தொடங்கப்படும். கண்காட்சியின் மற்ற அம்சங்கள் எஃப்1 பிட் கட்டடத்தில் இடம்பெறும்.
தேசிய தினக் கொண்டாட்டங்களின்போது சிங்கப்பூர் கொடியைப் பறக்கவிட்டுச் செல்லும் 'சினூக்' ஹெலிகாப்டரிலும் ஏறி வருகையாளர்கள் செல்லலாம். 'டெரெக்ஸ்', 'பயோனிக்ஸ்' போன்ற இதர ராணுவக் கவச வாகனங்களிலும் அவர்கள் சென்றுவரலாம்.
'சார்21' துப்பாக்கியைக் கொண்டு பாவனை சண்டைப் பயிற்சியிலும் அவர்கள் ஈடுபடலாம்
இவ்வாண்டின் பொது வரவேற்பு நிகழ்ச்சி மூன்று வாரயிறுதிகளில் நடைபெறும். பிரதான கண்காட்சி எஃப்1 பிட் கட்டடத்தில் மே 28 முதல் 30ஆம் தேதிவரை நடைபெறும். இதர இரு கண்காட்சிகள் குடியிருப்பாளர்கள் வசிக்கும் பொங்கோலிலும் பீஷானிலும் நடைபெறும். பொங்கோலில் நடைபெறும் கண்காட்சி ஜூன் 3 முதல் 5 வரையிலும் பீஷானில் கண்காட்சி ஜூன் 10 முதல் 12 வரையிலும் நடைபெறும்.
ஆளில்லா வானூர்திகளுக்கான உள்புற பகுதிக்கு வருகையாளர்கள் தங்கள் சொந்த வானூர்திகளைக் கொண்டு வந்து அவற்றைப் பறக்கவிடலாம்.