சிங்கப்பூரின் தலைசிறந்த பள்ளிகளில் ஒன்றில் வரலாற்றுப் பாட ஆசிரியராக இருந்த ஒருவருக்கும் வயது குறைந்த மாணவி ஒருவருக்கும் இடையே 2011ஆம் ஆண்டில் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. அப்போது அந்த மாணவியிடம் அநாகரிகமான செயல்களில் ஈடுபட்ட அந்த ஆடவருக்கு நேற்று 15 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
2018ல் இந்த வழக்கு காவல்துறையின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. தமக்கு 15 வயதாக இருந்தபோது நிகழ்ந்த இந்தக் குற்றத்தை வெளியில் சொல்லாமல் மௌனம் காத்து வந்த அந்த மாணவி, 2018ல் அதுபற்றி தெரிவித்தார்.
இந்தக் குற்றத்தைத் தொடர்ந்து அந்த மாணவி மனச்சோர்வுக்கு ஆளானதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. உணவருந்துவதைக் குறைத்துக்கொண்ட அவர், கடந்த ஆண்டு மே மாதம் உயிரை மாய்த்துக்கொண்டார். அப்போது அவருக்கு வயது 25.
திருமணமான அந்த 47 வயது குற்றவாளி, சிறார்கள், இள வயதினர் சட்டத்தின்கீழ் இளையர் ஒருவரிடம் அநாகரிகமான செயல்களில் ஈடுபட்டதாக 2020 நவம்பரில் இரு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். அவருக்குத் தண்டனை விதிப்பதில் மற்ற இரு குற்றச்சாட்டுகளும் கருத்தில் கொள்ளப்பட்டன.
பாதிக்கப்பட்ட அந்த மாணவியின் அடையாளத்தைப் பாதுகாக்க அந்தக் குற்றவாளி, அவர் பணிபுரிந்த பள்ளி பற்றிய விவரங்களை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்த வழக்கு குறித்து மாவட்ட நீதிபதி எடி தாம் கூறுகையில், "குற்றங்களால் ஏற்படும் நீண்டகால விளைவுகள், ஒருவரின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு வழிவிடுகின்றன என்பதை இந்த வழக்கு காட்டுகிறது.
"இளையர் ஒருவர் மீது புரியப்படும் பாலியல் செயல், மிக மோசமான விளைவை ஏற்படுத்தலாம் என்பதையும் இது காட்டுகிறது. எனவேதான், பாலியல் செயல்களில் இருந்து இளையர்களைப் பாதுகாக்கவே சட்டம் நடைமுறையில் உள்ளது," என்று விவரித்தார்.
குற்றவாளியான அந்த முன்னாள் ஆசிரியர் மீது மற்றவர்கள் அபிமானம் கொண்டிருந்தனர். அந்த வகையில் அந்த மாணவி அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை அவர் தவறாகப் பயன்படுத்திக்கொண்டதாக நீதிபதி சொன்னார்.
அந்த ஆடவருக்கு இருமுனை கோளாறு (பைபோலர் டிஸ்ஆர்டர்) இருந்ததாக முன்னதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அவர் குற்றம் புரிய அவருக்கு இருந்த மனநலப் பிரச்சினை காரணமல்ல என்பது மனநலப் பரிசோதனையில் தெரியவந்தது. எனவே, சிறைத் தண்டனைக்குப் பதிலாக அவருக்குக் கட்டாய சிகிச்சை உத்தரவைப் பிறப்பிக்க இயலாது என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

