உக்ரேன் போர், சீனாவில் தொற்று காரணமாக பொருளியல் 3-4% அளவில் விரிவடைய வாய்ப்புள்ளது
சிங்கப்பூரின் பொருளியல் இந்த ஆண்டில் 3 விழுக்காடு முதல் 5 விழுக்காடு வரை வளரும் என்று வர்த்தக தொழில் அமைச்சு இப்போதும் கணிக்கிறது.
ஆனால், உக்ரேன் போர், சீனாவில் கொவிட்-19 தொற்று காரணமாக இடம்பெறும் முடக்கம் ஆகியவை காரணமாக அந்த வளர்ச்சி, 3% முதல் 4% வரைப்பட்ட அளவில் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக அமைச்சு எச்சரித்துள்ளது.
உக்ரேன் போர் காரணமாக பிப்ரவரி முதல் உலகப் பொருளியல் சூழல் பாதிக்கப்பட்டு வந்ததை அமைச்சு நேற்று சுட்டிக்காட்டியது. போர் பிரச்சினை காரணமாக உலகளவில் எரிசக்தி, உணவு, இதர பண்டகப் பொருள்களின் விநியோகக் கட்டமைப்பு பாதிக்கப்பட்டு உள்ளது.
அவற்றின் விளைவாக உலகளவில் பணவீக்கம் கூடிவிட்டது. பல பொருளியல்களின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று அமைச்சு நேற்று வெளியிட்ட சிங்கப்பூர் 2022 முதல் காலாண்டு பொருளியல் ஆய்வு அறிக்கையுடன் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
சீனாவில் கொவிட்-19 தொற்று பரவுவதைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் நடப்புக்கு வந்துள்ளன.
இதன் காரணமாக அந்த நாட்டின் பொருளியலில் தாக்கம் ஏற்படக்கூடிய நிலை உருவாகி இருக்கிறது. அதன் விளைவாக உலகளவில் பொருள் சேவை விநியோகத்தில் தேக்கம் ஏற்படலாம் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
உக்ரேன் போர் காரணமாகவும் சீனாவில் முடக்கம் காரணமாகவும் உலகளவில் பொருள் சேவை விநியோகக் கட்டமைப்பில் ஏற்படக்கூடிய இடையூறுகள் எதிர்பார்க்கப்படுவதைவிட கடுமையாக இருக்கலாம் என்றும் அவை அதிக காலம் நீடிக்கக்கூடும் என்றும் அமைச்சு கூறியது.
அவற்றின் விளைவாக அமெரிக்கா, சீனா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் முன்பு கணிக்கப்பட்டதைவிட உற்பத்தித் துறை மேலும் பாதிக்கப்படலாம். மொத்த உள்நாட்டு உற்பத்தி குறையலாம் என்பதையும் அமைச்சு சுட்டியுள்ளது.
இதனிடையே, உலகப் பொருளியல் நிலவரம் பற்றி கருத்துரைத்த வர்த்தக தொழில் அமைச்சுக்கான நிரந்தரச் செயலாளர் கேப்ரியல் லிம், உலகப் பொருளியல் கீழே இறங்குமுகமாகக்கூடிய ஆபத்துகள் கணிசமான அளவுக்கு இருப்பதாகத் தெரிவித்தார்.
உக்ரேன்-ரஷ்ய போர் மேலும் கடுமையாவது; எதிர்பார்க்கப்படுவதைவிட அதிகமாக உலகளவில் பொருள் சேவை விநியோகக் கட்டமைப்பு கடுமையாகப் பாதிக்கப்படுவது; நிதித்துறை நிலைப்பாட்டிற்கான ஆபத்துகள் ஆகியவை இவற்றுக்கான அம்சங்களில் உள்ளடங்கும் என்றாரவர்.
மொத்தமாக ஒப்பிட்டுப் பார்க்கையில், சிங்கப்பூர் பொருளியலுக்கான புறத்தேவை வாய்ப்பு மூன்று மாதத்திற்கு முன்பு இருந்ததைவிட இப்போது பலவீனமடைந்து உள்ளது என்பதே அமைச்சின் மதிப்பீடு.
இருந்தாலும்கூட சிங்கப்பூரில் கொவிட்-19 சூழ்நிலை கட்டுக்குள் வந்துவிட்டதை அமைச்சு சுட்டிக்காட்டியது.
இதன் விளைவாக எல்லைகள் எதிர்பார்க்கப்பட்டதைவிட வேகமாக திறக்கப்பட்டன. சிங்கப்பூர் பொருளியலின் சில துறைகளின் வளர்ச்சி வாய்ப்புகள் வலுவாக இருப்பதையும் காணமுடிகிறது.
2022 முதல் காலாண்டில் பொருளியல் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 3.7% வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை ஆய்வு சுட்டியது. இந்த வளர்ச்சி 3.4%தான் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இவ்வேளையில், நேற்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சிங்கப்பூர் நாணய ஆணையம், சிங்கப்பூர் வெள்ளி மதிப்பு உயர்வதற்கு வகை செய்யும் இந்த ஆணையத்தின் கொள்கை, பணவீக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் உதவக்கூடிய, ஏற்புடைய ஒன்றாக இருக்கிறது என்றது.