எம்ஆர்டி ரயில் ஒன்றில் மின்தேக்கி சாதனம் கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென தீப்பிடித்துக்கொண்டது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோமர்செட் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் வண்டியைவிட்டு கீழே இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அந்தத் தீ விபத்து பற்றி நேற்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
வடக்கு-தெற்கு வழித்தடத்தில் வடக்கு நோக்கி சென்ற ரயிலில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுமார் 12.10 மணிக்கு அந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அறிக்கை தெரிவித்தது. பயணி ஒருவர் உடனடியாக தீயை அணைத்துவிட்டதாக 'எஸ்எம்ஆர்டி டிரெயின்ஸ்' நிறுவனத்தின் தலைவர் லாம் ஷெவ் காய் கூறினார்.
எஸ்எம்ஆர்டி ஊழியர்கள் அந்த இடத்தில் இருந்து உதவினார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோமர்செட் நிலையத்தில் பயணிகள் அனைவரும் ரயிலில் இருந்து தரை இறங்கினர்.
பயணிகள் யாருக்கும் மருத்துவ உதவி எதுவும் தேவைப்படவில்லை என்றும் திரு லாம் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே, ஃபேஸ்புக்கில் வெளியான ஒரு காணொளியைப் பார்க்கையில், பயணிகள் ரயிலில் இருந்து வெளியேறுவதைக் காண முடிந்தது.
சிலர் தங்களுடைய வாயை மூடியபடி வெளியே வந்தார்கள். அவர்களைச் சூழ்ந்து புகை காணப்பட்டது.
பாதிக்கப்பட்ட ரயில் வண்டி பணிமனைக்குப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த விபத்து தொடர்பில் பொது போக்குவரத்து பாதுகாப்பு தளபத்தியம் நடத்தும் புலன்விசாரணையில் எஸ்எம்ஆர்டி நிறுவனம் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.