வடகொரியாவுக்கு ஏறக்குறைய 341,000 வெள்ளி மதிப்பிலான 'போக்கா' பானங்களை ஏற்றுமதி செய்ததாக மொத்தவிற்பனை விநியோகிப்பாளர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய நாட்டு நிறுவனம் வடகொரியா மீது தடை விதித்ததையடுத்து 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து அந்நாட்டுடனான வர்த்தகத் தொடர்புகள் அனைத்தையும் சிங்கப்பூர் அதிகாரபூர்வமாக ரத்து செய்துவிட்டது.
இந்நிலையில், இறக்குமதி, ஏற்றுமதி விதிமுறைகளின்கீழ் '123 டியூட்டி ஃப்ரீ' நிறுவனத்தின்மீது நேற்று ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்நிறுவனம் வடகொரியாவுக்கு 'போக்கா மில்க் காஃபி', 'போக்கா மெலன் மில்க்' உள்ளிட்ட 'போக்கா' பானங்களை ஏற்றுமதி செய்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
2018ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதிக்கும் ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கும் இடையில் இந்த ஏற்றுமதிகள் இடம்பெற்றதாகக் கூறப்பட்டது.
அடுத்த மாதம் 27ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 123 டியூட்டி ஃப்ரீ நிறுவனத்திற்கு அதிகபட்சம் 100,000 வெள்ளி அல்லது ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களின் விலையைப் போல மூன்று மடங்கு தொகை என இரண்டில் எது அதிகமோ அந்தத் தொகை அபராதமாக விதிக்கப்படலாம்.
2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வடகொரியாவுக்கு ஏற்றுமதி செய்த விவரங்களை மறைக்கும்படி 'போக்கா சிங்கப்பூர்' அதன் விநியோகிப்பாளருக்கு நெருக்குதல் தந்ததாக, 2019 ஆகஸ்ட்டில் 'என்கே நியூஸ்' செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது. வர்த்தகத் தடையை மீறி வடகொரியாவில் விற்பனையாளர்களை அது தேடிவருவதாகவும் அதற்கு முன்னர் கூறப்பட்டிருந்தது.
அதுகுறித்து விசாரணை இடம்பெறுவதாக வெளியுறவு அமைச்சு அப்போது ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்திருந்தது.
வடகொரியாவுக்கு சட்டவிரோதமாகப் பொருள்களை ஏற்றுமதி செய்ய முயற்சி செய்ததாக 2018 ஆம் ஆகஸ்ட் மாதம் வெளிவந்த ஊடகச் செய்திகளை 'போக்கா சிங்கப்பூர்' நிறுவனம் அப்போது மறுத்தது.