நான்கு மாதங்களுக்குத் தேவையான அளவு உறையவைத்த கோழி இருப்பில் இருப்பதாக ஃபேர் பிரைஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இரண்டு மாதங்களுக்குத் தேவையான அளவு கோழி சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாக நிறுவனம் கூறியது.
கடந்த சில நாள்களாக பல ஈரச்சந்தைகளிலும், பேரங்காடிகளிலும், கோழி இறைச்சி விற்றுத்தீர்ந்தது. மலேசியா அதன் கோழி ஏற்றுமதியைத் தற்காலிகமாக நிறுத்தபோவதாக அறிவித்ததைத் தொடர்ந்து சிங்கப்பூரர்கள் கோழி வாங்க முண்டியடித்துக் கொண்டனர்.
சிங்கப்பூரில் போதுமான அளவுக்கு உறையவைத்த கோழி இருப்பதாகவும், அதை அளவுக்கு அதிகமாக வாங்க வேண்டாம் என்றும் நிலைத்தன்மை, சுற்றுப்புறத் துணையமைச்சர் டெஸ்மண்ட் டான் கேட்டுக்கொண்டார்.
இன்று ஃபேர் பிரைஸ் நிறுவனத்தின் உணவு விநியோக நிலையத்திற்குச் சென்றிருந்த அவர் அவ்வாறு கூறினார்.
கோழி விற்பனையாளர்கள், விநியோக நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து மற்ற நாடுகளிலிருந்து கோழி இறைச்சியை இங்கு இறக்குமதி செய்வது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.