விமானத் துறை, கடற்துறை, வர்த்தகம் ஆகியவற்றுக்கான மையமாக விளங்கும் சிங்கப்பூர் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க கூடுதல் பங்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால்தான் சிங்கப்பூர்
பசுமைத் திட்டம் 2030ன்கீழ் தேசிய அளவிலான இலக்கை சிங்கப்பூர் நிர்ணயித்துள்ளபோதிலும் மற்ற நாடுகளுடன் அது பங்காளித்துவ உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதாகப் போக்குவரத்து அமைச்சர்
எஸ். ஈஸ்வரன் தெரிவித்தார்.
டென்மார்க், இந்தியா, இத்தாலி ஜப்பான் நார்வே, சுவீடன், பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் இணைந்து ஃபர்ஸ்ட் மூவர்ஸ் கூட்டணியில் சிங்கப்பூர் இணைந்துள்ளதாக உலகப் பொருளியல் கருத்தரங்கில் திரு ஈஸ்வரன் நேற்று முன்தினம் அறிவித்தார்.
இந்தக் கூட்டணியில் 50க்கும் அதிகமான நிறுவனங்கள் இடம்பெறுகின்றன.
இக்கூட்டணியைக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற COP26 பருவநிலை மாற்றம் மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொடங்கி வைத்தார்.
புத்தாக்கமிக்க தூய எரிசக்தி தொழில்நுட்பத்துக்கான தேவைகளை அதிகரிப்பதே கூட்டணியின் நோக்கமாகும்.
"இந்தக் கூட்டணியில் இணைய சிங்கப்பூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இது சிங்கப்பூருக்குக் கிடைத்துள்ள கௌரவம். விமானத் துறை, கடற்துறை, வர்த்தகம் ஆகியவற்றின் மையமாக நாங்கள் திகழ்வதால் இதில் எங்களால் பங்களிக்க முடியும். எனவே, அழைப்பை ஏற்றுக்கொண்டோம்," என்று வர்த்தக உறவுகளுக்குத் தலைமை தாங்கும் அமைச்சருமான திரு
ஈஸ்வரன் கூறினார்.
தனியார் துறையுடன் ஒன்றிணைந்து செயல்படும் பழக்கம் சிங்கப்பூருக்கு இருப்பதாகவும் இதன்மூலம் அதிக பங்களிக்க முடியும் என்றும் திரு ஈஸ்வரன் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய சிங்கப்பூர் பசுமைத் திட்டம் 2030ன்கீழ், நீடித்த நிலைத்தன்மை தொடர்பான புதிய தீர்வுகளை மேம்படுத்துவதில் ஆசியாவின் வட்டார மையமாகத் திகழ சிங்கப்பூர் இலக்கு கொண்டுள்ளது.
"சிங்கப்பூரால் பங்களிக்க முடியும் என்ற அங்கீகாரம் இருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது," என்றார் அமைச்சர் ஈஸ்வரன்.
உள்ளூர் நிறுவனங்களுடன் பேசி கூட்டணியில் சேர அவற்றை அரசாங்கம் ஊக்குவிக்கும் என்று போக்குவரத்து அமைச்சு நேற்று தெரிவித்தது.

