'என்டியுசி ஃபேர்பிரைஸ்' பேரங்காடியில் நான்கு மாதங்களுக்குத் தேவையான அளவு கோழி இறைச்சி கையிருப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு மாதங்களுக்குத் தேவையான அளவு கோழி இறைச்சி வெளிநாட்டில் இருந்து வந்துகொண்டிருப்பதால் வாடிக்கையாளர்கள் பதற்றத்தில் அதிக அளவில் வாங்கிக் குவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கடந்த சில நாள்களாக மக்கள் அதிக அளவிலான கோழி இறைச்சியை வாங்குவதால் சில ஈரச் சந்தைகளிலும் பேரங்காடிகளிலும் கோழி இறைச்சி விற்றுத் தீர்ந்துவிட்டதாகக் கூறப்பட்டது.
ஜூன் 1ஆம் தேதியில் இருந்து மாதத்துக்கு 3.6 மில்லியன் கோழிகளின் ஏற்றுமதியை நிறுத்தப் போவதாக மலேசியா அறிவித்ததையடுத்து சிங்கப்பூரில் மக்கள் கோழி இறைச்சியை வாங்கி வைக்கத் தொடங்கினர்.
நாட்டில் போதிய அளவு கோழி இறைச்சி கையிருப்பில் உள்ளதால் உறையவைக்கப்பட்ட கோழி இறைச்சியைப் பதுக்கவோ அதிக அளவில் வாங்கிக் குவிக்கவோ வேண்டாம் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புறத்துக்கான துணையமைச்சர் டெஸ்மண்ட் டான் வலியுறுத்தி உள்ளார்.
அப்பர் தாம்சன் ரோட்டில் அமைந்திருக்கும் 'என்டியுசி ஃபேர்பிரைஸ்' உணவு விநியோக நிலையத்திற்குச் சென்றிருந்தபோது செய்தியாளர்களிடம் திரு டான் பேசினார்.
சிங்கப்பூருக்கு இறக்குமதியாகும் கோழி இறைச்சியில் 70 விழுக்காடு மலேசியா தவிர்த்து பிற நாடுகளில் இருந்து வருவதாகத் திரு டான் குறிப்பிட்டார்.
இறக்குமதியைப் பன்முகப்படுத்தியிருப்பதால் மலேசியாவில் இருந்து கோழி இறைச்சி விநியோகம் தடைபடுவது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இவ்வேளையில் 'என்டியுசி ஃபேர்பிரைஸ்' கோழி இறைச்சி விலையை உயர்த்துமா என்ற ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விக்கு 'என்டியுசி ஃபேர்பிரைஸ்' குழுமத்தின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி இலைன் ஹெங் பதில் அளித்தார்.
உணவுப் பொருள்களின் விலை அதிகரித்தபோதும் அண்மையில் 'ஃபேர்பிரைஸ்' முட்டை விலையைக் குறைத்ததுடன் சமையல் எண்ணெய்க்கு விலைக் கழிவு அளித்ததை அவர் சுட்டினார்.
விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க குழுமம் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுப்பதாகத் திருவாட்டி ஹெங் கூறினார்.