கேம்டன் மருத்துவ நிலையத்தில் நேற்று புதிய 'மயோபியா நிபுணத்துவ நிலையம்' திறக்கப்பட்டுள்ளது. கண் ஒட்டுவில்லை தயாரிப்பு நிறுவனமான 'மெனிகான்' உடன் இணைந்து உலகெங்கும் உள்ள வல்லுநர்களின் பங்காளித்துவத்துடன் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
'மயோபியா' எனப்படும் கிட்டப் பார்வைக் குறைபாட்டிற்கு சிகிச்சை அளிப்பதுடன் அது தொடர்பான ஆய்வு, கல்வி நிலையமாகவும் இது செயல்படும்.
இதிலுள்ள கண் மருத்துவ நிபுணர்கள் சிங்கப்பூர் சிறுவர்களிடம் கிட்டப் பார்வை பாதிப்பு ஏற்படாமல் தவிர்ப்பது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக பிள்ளைகள் வெளிப்புற விளையாட்டில் ஈடுபடும்போது சூரிய வெளிச்சத்தில் உள்ள புற ஊதாக்கதிர்கள் 'டோபாமைன்' எனும் வேதிப் பொருள் உற்பத்தியைத் தூண்டுவதாகவும் அது கிட்டப்பார்வையைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது என்றும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
சிங்கப்பூரில் பிள்ளைகள் வார நாள்களில் சராசரியாக ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வெளிப்புறங்களில் செலவிடுவதாகவும் வார இறுதி நாள்களில் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் செலவிடுவதாகவும் ஆய்வில் தெரியவந்தது.
எனவே புதிய நிலையத்தின் ஆய்வாளர்கள், புற ஊதாக் கதிர்களில் 'டோபாமைன்' உற்பத்திக்குத் தேவையான முக்கிய அம்சத்தைக் கண்டறிய முயற்சி செய்வர்.
பிள்ளைகள் படிப்பதற்கும் எழுதுவதற்கும் ஏதுவான வெளிச்சத்தையும் வெளிப்புறத்தில் செலவிட வேண்டிய நேரத்தையும் பரிந்துரைக்க கண் மருத்துவ நிபுணர்களுக்கு இது உதவும்.
சிங்கப்பூரில் பொதுவாக, பிள்ளைகளுக்கு எட்டு வயதுக்குப் பிறகு கிட்டப் பார்வைக் குறைபாடு ஏற்படத் தொடங்குகிறது.
தொடக்கநிலை ஆறாம் வகுப்பு படிக்கும்போது 65 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
கொவிட்-19 கிருமிப்பரவலுக்குப் பிறகு சிங்கப்பூரில் கிட்டப் பார்வை பாதிப்பு கண்டறியப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.