நோயாளியின் மரபியல், சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை ஆகியவற்றின் அடிப்படையில் அவருக்கு உகந்ததாகப் பரிந்துரைக்கப்படும் மருந்து 'பிரிசிஷன் மெடிசின்' எனப்படும்.
புற்றுநோய், நாள்பட்ட நோய்கள் போன்றவற்றிற்கான மூல காரணத்தைக் கண்டறியவும், நோயைத் தடுக்கும் முறைகளை அடையாளம் காணவும் மரபணுத் தகவல்கள் பெரிதும் உதவும்.
இவற்றைக் கருத்தில்கொண்டு அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆரோக்கியமான 100,000 சிங்கப்பூரர்களின் முழுமையான மரபணுத் தகவல்கள் சேகரிக்கப்பட இருக்கின்றன.
30 வயதுக்கும் 80 வயதுக்கும் இடைப்பட்டவர்களின் மரபணுத் தகவல்கள் இவ்வாறு சேகரிக்கப்படும்.
'புரோஜெக்ட் எஸ்ஜி100கே' எனப்படும் இத்திட்டத்தின்கீழ் திரட்டப்படும் மரபணுத் தகவல்களின் தரவுதளம் ஆசியாவின் ஆகப் பெரிய இத்தகைய தகவல் தளங்களில் ஒன்றாக விளங்கும்.
இந்தத் திட்டத்தின் தொடர்பில் சிங்கப்பூரின் 'பிரிசைஸ்' ஆய்வு நிறுவனமும் மரபணுத் தொழில்நுட்ப நிறுவனமான 'இல்லுமினா'வும் நேற்று பங்காளித்துவ உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
கையெழுத்து நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கலந்துகொண்டார்.
மரபணுத் தகவல் திரட்டப்படும் 100,000 பேரில் 40 விழுக்காட்டினர் மலாய், இந்திய இனத்தவர்களாகவும் எஞ்சியோர் சீனர்களாகவும் இருப்பர்.
தற்போது இத்திட்டத்தில் 70,000 பேர் பதிந்துகொண்டிருப்பதாகவும் வாரத்துக்கு 300 பேர் என்ற அடிப்படையில் விரைவில் எஞ்சிய 30,000 பேரும் திட்டத்தில் சேர்க்கப்படுவர் என்றும் திரு ஹெங் கூறினார்.
திட்டத்தில் பங்கேற்போரின் ரத்த மாதிரிகள் முழுமையான மரபணு வரிசைப்படுத்தலுக்கு அனுப்பப்படும்.
அவர்களின் ரத்த சர்க்கரை அளவு, ரத்தக் கொழுப்பு அளவு போன்றவற்றுக்கான சோதனைகளுடன் உடலுறுதிச் சோதனையும் நடத்தப்படும்.
வாழ்க்கைமுறை பற்றிய கேள்விகளுக்கும் அவர்கள் பதிலளிப்பர்.
இந்தத் தகவல்களைப் புரிந்துகொள்வதன் மூலம் சரியான சிகிச்சை முறையைத் தேர்ந்தெடுப்பதும் குறிப்பிட்ட அளவில் மருந்துகளைத் தருவதன் மூலம் அவற்றின் செயல்திறனை அதிகரிப்பதும் சாத்தியமாகும் என்றார் துணைப் பிரதமர்.
புதிய வேலைவாய்ப்புகள், புதிய நிறுவனங்கள், மேலும் துல்லியமான கருவிகள், மருந்துகள், தரவு ஆய்வு ஆகியவற்றின் மூலம் 'புரோஜெக்ட் எஸ்ஜி100கே' திட்டம் சிங்கப்பூரின் உயிர்மருத்துவத் துறையை வலுப்படுத்த உதவும் என்று கருதப்படுகிறது.