கிளமெண்டி காவல் பிரிவு அலுவலக வளாகத்துக்கு அருகே கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி காவல்துறை அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்ட சூ சியோ வீ மீது நேற்று கூடுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
2019 ஜூன் 9ஆம் தேதி மாலை ஆறே முக்கால் மணியளவில் 'ஏட்டோஸ்' அதிகாரியின் இடது நெற்றிப் பொட்டில் சூ குத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
கம்போங் ஜாவா அக்கம்பக்கக் காவல் நிலையத்துக்கு அருகே நடந்த சம்பவம் குறித்த மேல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
குடும்ப வன்முறை தொடர்பில் மாது ஒருவருக்கு ஆதரவாகப் பிறப்பிக்கப்பட்ட தனிநபர் பாதுகாப்பு ஆணையைச் சென்ற ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி மீறியதாக சூ மீது மேலும் ஒரு குற்றம்சாட்டப்பட்டது. சூ அந்த மாது மீது 'ஏரோசால்' குவளையை வீசியதாகக் கூறப்பட்டது. அதே சம்பவத்தின் தொடர்பில் ஆபத்து விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாகவும் அவர் மீது மூன்றாவது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
கிளமெண்டி அவென்யூ 5ல் இந்த ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி நடந்த சம்பவத்தில் சூவின் இடது கையில் அதிகாரிகள் சுட நேர்ந்தது. கையில் கத்தியுடன் அதிகாரி ஒருவரை அவர் தாக்க முற்பட்டதாகக் கூறப்பட்டது. அதற்குச் சற்றுநேரம் முன்பாக கிளமெண்டி அவென்யூ 1ல் 41 வயது மாதை நோக்கி அவர் கத்தியை வீசியதாகவும் கூறப்பட்டது.
கத்தியை வீசியது நிரூபிக்கப்பட்டால் சூவிற்கு ஏழாண்டு வரையிலான சிறைத்தண்டனையுடன் அபராதமோ பிரம்படியோ விதிக்கப்படலாம்.
பணியில் ஈடுபட்டிருந்த அரசாங்க அதிகாரியை வேண்டுமென்றே காயப்படுத்திய குற்றத்துக்கு ஏழாண்டு வரையிலான சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி ஆகியவை விதிக்கப்படலாம்.
தனிநபர் பாதுகாப்பு ஆணையை மீறியதற்கு ஈராயிரம் வெள்ளி வரையிலான அபராதமோ ஆறு மாதம் வரையிலான சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.