கொவிட்-19 பெருந்தொற்று முடிவடைந்து விட்டாலும் உடல்நலமில்லை என்றால் சிங்கப்பூரர்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.
2019க்குப் பிறகு ஜப்பானுக்குச் சென்றிருக்கும் திரு லீ, ஜப்பானியர்களிடம் மிக மிக நல்ல பழக்கம் இருப்பதைச் சுட்டினார்.
கொவிட்-19 காலத்துக்கு முன்பிருந்தே ஜப்பானியர் தங்களுக்கு உடல்நலமில்லை என்றால் வெளியே செல்லும்போது, மற்றவர்களை நோயிலிருந்து பாதுகாக்கும் விதமாக முகக்கவசம் அணிந்துதான் செல்வார்கள் என்றார்.
"பெருந்தொற்றுக் காலத்தின்போது முகக்கவசம் அணியாமல் செல்லும் ஜப்பானியர்களுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை. காரணம் அவர்கள் தனது மற்றும் பிறரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முகக்கவசத்தை தானாக அணிந்துகொள்வார்கள். இந்த அரிய பண்பை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
"சிங்கப்பூரில், கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு வெளிப்புறத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமல்ல என்று அறிவிக்கப்பட்டாலும், உங்களுக்கு உடல்நலமில்லை என்றால் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்லுங்கள். முகக்கவசம் அணியும் பழக்கத்தை நாம் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வருவதால், இது நமக்குப் புதிதல்ல," என்று திரு லீ விளக்கினார்.

