நன்கொடை அமைப்புகளும் எஸ்ஜி கேர்ஸ் தொண்டூழிய நிலையங்களும் தங்கள் பயனாளர்களுக்காக ஃபேர்பிரைஸ் பேரங்காடியில் வாங்கும் அத்தியாவசிய உணவு மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களுக்கு விலைக்கழிவு பெறும்.
இந்தத் தொண்டூழிய நிலையங்களும் சமூகப் பங்காளிகளும் ஃபேர்பிரைஸ் சின்னமிட்ட பொருள்களைப் பத்து காசு வரையிலான விலைக்கழிவில் வாங்கிக்கொள்ளலாம்.
இதன் தொடர்பான புரிந்துணர்வுக் குறிப்பில், கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் எஸ்ஜி கேர்ஸ் அலுவலகமும் ஃபேர்பிரைஸ் குழுமமும் நேற்று கையெழுத்திட்டன.
உலகளாவிய அதிர்ச்சிகள் மற்றும் உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக சிங்கப்பூரில் பயனீட்டாளர் விலைகள் அண்மைய மாதங்களில் உயர்ந்துள்ளதால், பணவீக்கம் 10 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
உடன்பாடு கையெழுத்திடும் சடங்கில் பேசிய கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங், "தற்போதைய சூழ்நிலையில் அத்தியாவசியமான உணவு மற்றும் வீட்டுப் பொருள்களை வாங்குவதில் அதிக பாதிப்புக்குள்ளாகக்கூடிய குடும்பங்களுக்கும் அவர்களுக்கு சேவையளிக்கும் சமூக அமைப்புகளுக்கும் பெரும் சவாலாக உள்ளது," என்றார்.
"இச்சலுகை மூலம் தனது சங்கம் சேவையாற்றும் சுமார் 50 பயனாளர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருள்களை வாங்கும்போது, அதிலிருந்து சிறிய அளவு பணத்தை சேமிக்க முடியும். அதை கொண்டு மேலும் சில பயனாளர்களுக்குச் சிலவற்றை வாங்கலாம்," என்றார் ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கத்தின் செயல்பாட்டு நிர்வாகி திரு முகமது ஹபிப்.
நிபுணத்துவ பொறியாளர்களின் உதவியோடு பயனாளர்களின் இடங்களில் மின்தூக்கிப் பாதுகாப்பு, மின்சார இணைப்பு, தண்ணீர்க் குழாய் பழுதுபார்ப்பு போன்ற பணிகளைக் கட்டணம் வசூலிக்காமல் செய்வதற்கும், எஸ்ஜி கேர்ஸ் தொண்டூழிய நிலையங்களும் நன்கொடை அமைப்புகளும் நிபுணத்துவ பொறியாளர் அமைப்புடன் இணைந்து பணியாற்றும்.

