ஜூன் 10ஆம் தேதி முதல் 36 நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகளுக்கு தனது எல்லைகள் திறக்கப்படும் என்று ஜப்பான் நேற்று முன்தினம் அறிவித்துள்ள நிலையில், சிங்கப்பூரில் உள்ள பயண ஆர்வலர்கள் மற்றும் தொழில்துறையினர் அங்கு ஓய்வுப் பயணத்திற்கான திட்டங்களைத் தயாரித்து வருகின்றனர்.
மே 21, 22 தேதிகளில், இயூ ஹாலிடேஸ் பயண நிறுவனம் நடத்திய ஜப்பான் பயணக் கண்காட்சிக்கு வருகையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது.
200க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளதாகவும் அவர்களில் பெரும்பான்மையோர் குடும்பங்களாகப் பதிந்துகொண்டுள்ளனர் என்றும் இயூ ஹாலிடேஸ் நிறுவன இயக்குநர் ஃபியோனா மா கூறினார்.
"ஆகப் பெரிய குடும்பமாக 15 பேர் பயணத்துக்குப் பதிந்துகொண்டனர். சிங்கப்பூரர்கள் பலர் முன்கூட்டியே பயணங்களுக்குப் பதிவு செய்து கொண்டுள்ளனர். ஆண்டிறுதியில் பயணக் கட்டணம் அதிகரித்துவிடும் என்று அவர்கள் அச்சப்படுவதே அதற்கு காரணம்," என்றும் திருவாட்டி மா சொன்னார்.
ஜப்பானின் இந்த அறிவிப்புக்கு முன்னதாக இயூ ஹாலிடேஸ் பயண நிறுவனம், ஜூன் மாதத்துக்கு எந்தப் பயணத்துக்கும் ஏற்பாடு செய்யவில்லை. ஆனால், இப்போது வாடிக்கையாளர்கள் பலர் அடுத்த மாதம் முடிவில் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்ள விரும்புவதால், அந்நிறுவனம் பயணங்களுக்கு ஏற்பாடு செய்து வருகிறது.
இம்மாதம் 17ஆம் தேதியன்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் சோதனைத் திட்டத்தின் ஒரு பகுதியாக சிறிய குழுவாக சுற்றுப்பயணங்களில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள் என்று ஜப்பான் சுற்றுலா வாரியம் அறிவித்தது. ஆனால், ஒரு குழுவில் அனுமதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை அது குறிப்பிடவில்லை.
மற்ற பயண நிறுவனங்களின் மூன்று பிரதிநிதிகள் உட்பட மொத்தம் நான்கு சிங்கப்பூரர்கள் மே 26 முதல் 30ஆம் தேதி வரை இந்தப் பயணத்தில் இடம்பெறுவர் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
சிங்கப்பூர் தவிர, குழுப் பயணங்களை நடத்த அனுமதிக்கப்பட்ட மற்ற மூன்று நாடுகளும் சோதனைப் பயணத்தில் ஈடுபட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.

