கொவிட்-19 கிருமித்தொற்றால் ஈராண்டுகள் முடங்கிக் கிடந்த செந்தோசா மீண்டும் புத்துயிர் பெற இருக்கிறது. அங்கு மூன்று திட்டங்கள் நிறைவடையும் தறுவாயில் உள்ளன.
ராஃபிள்ஸ் செந்தோசா ரிசார்ட் அண்ட் & ஸ்பா சிங்கப்பூர், செஞ்சுரிஸ்கேப் நடைபாதை, பல்வேறு அம்சங்கள் நிறைந்த கேளிக்கை வளாகமான பலவான் சேண்ட்ஸ் ஆகியவை அடுத்த ஆண்டு திறக்கப்பட உள்ளன.
"கடந்த இரண்டு ஆண்டுகளாக வர்த்தக ரீதியில் அனைத்தும் முடங்கிக் கிடந்தன. ஆனால், அதை நாங்கள் பயன்படுத்திக்கொண்டு சுற்றுப்பயணிகளைக் கவரும் அம்சங்களை மெருகூட்ட முடிவெடுத்தோம்.
"அடுத்த ஆண்டு செந்தோசாவில் பல்வேறு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படும். இப்போது கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் அதற்கான நேரமும் கூடி வந்துள்ளது. 2024ஆம் ஆண்டுக்குள் ஒரு புதிய செந்தோசாவைக் காட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம்," என்றார் செந்தோசா மேம்பாட்டுக் கழகத்தின் வர்த்தக, வாடிக்கையாளர் அனுபவ மேம்பாட்டுப் பிரிவின் இயக்குநர் சியூ தியோங் ஹெங்.
சோஃபிடெல் சிங்கப்பூர் செந்தோசா ரிசார்ட் அண்ட் & ஸ்பாவுக்கு நேர் எதிரே அமைந்துள்ள ராஃபிள்ஸ் செந்தோசா ரிசார்ட்டில் தனிப்பட்ட நீச்சல் குளம் உள்ள வில்லா தங்குமிடங்கள் இருக்கும்.
செந்தோசா-பிரானி பெருந்திட்டத்தின் ஒரு பகுதியான செஞ்சுரிஸ்கேப் நடைபாதை ரிசோர்ட்ஸ் வோர்ல்டு செந்தோசா உல்லாசத் தளத்தை தீவின் மற்ற கடற்கரைகளுடன் இணைக்கும். இது அடுத்த ஆண்டு இறுதிக்குள் தயாராகி விடும்.
ஷங்ரிலா குழுமத்தைச் சேர்ந்த பலவான் சேண்ட்ஸ் வளாகத்தில் மின்சார கோ கார்ட் பந்தயத் தடம், சிறிய கோல்ஃப் திடல், இரண்டு கடற்கரை மகிழ்மன்றங்கள் ஆகியவை இருக்கும். இது அடுத்த ஆண்டு இரண்டாம் காலாண்டில் திறக்கப்படும்.
"நிகழ்ச்சிகளும் நடவடிக்கைகளும் செந்தோசாவுக்கு மிகவும் முக்கியம். அவை அந்தத் தீவின் உயிர்நாடியாகத் திகழ்கின்றன. இப்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், பெரிய அளவிலான நிகழ்ச்சிகளை இப்போது எங்களால் ஏற்பாடு செய்ய முடியும்," என்று மேலும் கூறினார் திரு சியூ.
அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சிதான் ஜூன் 3ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறும் ஸெந்தோசா விழா.
செந்தோசா மேம்பாட்டுக் கழகம், சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம், இதர பங்காளிகள் ஆகியவை இணைந்து நடத்தும் இந்த விழா, முதல்முறையாக இடம்பெறும் சிங்கப்பூர் ஆரோக்கிய விழா மற்றும் செந்தோசாவின் 50ஆம் ஆண்டு விழா ஆகியவற்றின் ஓர் அம்சமாக இருக்கும்.
ஸெந்தோசா (Zentosa) விழாவின் முக்கிய அம்சமாக இருப்பது ஸெந்தோசா (Zentosa) விழா கிராமம். இங்கு ஆரோக்கிய வகுப்புகள், விளையாட்டுப் பயிலரங்குகள், வெளிப்புற இசை நிகழ்ச்சிகள் போன்றவை இடம்பெறும். பலவான் கிரீன் பகுதியில் அமைந்துள்ள ஸெந்தோசா விழா கிராமம் ஜூன் 3 முதல் ஜூன் 30ஆம் தேதி வரை செயல்படும்.
தேசிய கலைகள் மன்றத்துடன் இணைந்து நடத்தப்படும் சுவரோவியம் வரைதல், கலைப் பலகைகளை வடிவமைத்தல் போன்ற கலை நடவடிக்கைகளிலும் பார்வையாளர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்த முடியும்.
திருவிழாவின் பெரும்பாலான பயிலரங்குகள், நடவடிக்கைகளுக்காகன கட்டணம் $5தான். மேலும் ஆரோக்கிய நிபுணர்களின் வகுப்புகள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சலுகைகளுக்கு கட்டணமில்லை.
வருகையாளர்கள் பலவான் கடற்கரையில் உள்ள இரண்டு முதல் நான்கு பேர் வரை தங்கக்கூடிய கூடாரங்களில் இரவு தங்கலாம். ஞாயிறு முதல் புதன் வரை ஓர் இரவுக்கு $388 கட்டணமும் வியாழன் முதல் சனிக்கிழமை வரை ஓர் இரவுக்கு $588 கட்டணமும் வசூலிக்கப்படும்.
செந்தோசாவில் உள்ள வர்த்தக அமைப்புகளும் செந்தோசா மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து இத்தகைய நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கியுள்ளன.
ஸெந்தோசா விழா பற்றிய மேல் விவரங்கள் பற்றி தெரிந்துகொள்ளவும், அதில் உள்ள நடவடிக்கைகளில் பங்கேற்க பதிந்துகொள்ளவும் https://zentosafest.sentosa.com.sg/ எனும் இணையத்தளத்தை நாடலாம்.