போதைப்பொருள் கடத்தியவர்கள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட இரண்டு பேரை மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று விடுவித்தது. அந்த இருவரில் ஒருவருக்கு முன்னதாக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ராஜ் குமார் அய்யாசாமி, 40, என்பவர் தனக்கு எதிரான குற்றத் தீர்ப்பையும் கட்டாய மரண தண்டனையையும் எதிர்த்து மேல்முறையீடு செய்து இருந்தார்.
அதைத் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தலைமையில் மூன்று நீதிபதி கொண்ட குழு ஏற்றுக்கொண்டது.
அதேபோல, ராமதாஸ் பொன்னுசாமி, 41, என்பவர் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையையும் 15 பிரம்படித் தண்டனையையும் எதிர்த்து செய்திருந்த மேல்முறையீட்டையும் மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதித்தது.
போதைப்பொருளின் தன்மை பற்றி இருவரும் அறிந்து இருந்தார்களா, இல்லையா என்பதிலேயே மேல்முறையீட்டு விசாரணை ஒருமித்த கவனம் செலுத்தியது. 1.875 கிலோ எடைக்குக் குறையாத அளவிலான கஞ்சா தொடர்பில் இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.
கஞ்சா இருந்த பையை ராமதாஸ் 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி ராஜிடம் கொடுத்தார் என்பதை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கண்டனர். சிங்கப்பூரரான ராஜ், தன்னுடைய பொறுப்பில் போதைப்பொருள் இருந்ததை ஆட்சேபிக்கவில்லை. ஆனால், விநியோகத்தில் தவறு நிகழ்ந்துவிட்டது என்று தன்னுடைய வழக்கறிஞர் ரமேஷ் திவாரி மூலம் அவர் வாதாடினார்.
'பட்டர்ஃபிளை' என்ற கஞ்சா போன்ற போதையை ஏற்படுத்தக்கூடிய செயற்கை ரசாயனப் பொருள் கலந்த புகையிலையைத் தான் கேட்டு இருந்ததாகவும் அதைப் பெறுவதற்காகச் சென்றபோது கஞ்சா இருந்த பையைத் தான் பெற்றுக்கொண்டுவிட்டதாகவும் ராஜ் வாதாடினார்.
அந்தப் பையை ராஜிடம் கொடுத்ததாகக் கூறப்பட்டதை மலேசியரான ராமதாஸ் மறுக்கவில்லை. ஆனால், அதிலிருந்த பொருளின் தன்மை பற்றி தனக்குத் தெரியாது என்று தனது வழக்கறிஞர் இயூஜின் துரைசிங்கம் மூலம் அவர் வாதாடினார்.
தான் ஓட்டிச் சென்ற லாரியில் ரசாயனம் தெளிக்கப்பட்ட புகையிலை அடங்கிய நான்கு பைகள் வைக்கப்பட்டு இருப்பதாக தன்னிடம் கூறப்பட்டது என்றும் ராமதாஸ் விசாரணையில் தெரிவித்தார்.
அந்த இருவரும் குற்றவாளிகள் என்று உயர் நீதிமன்றம் 2020 ஜூன் மாதம் தீர்ப்பளித்தது. மேல்முறையீட்டை விசாரித்த நீதிமன்றம் நேற்று அந்த இரண்டு பேருக்கு எதிரான குற்றத் தீர்ப்பை நிராகரித்து மேல்முறையீடுகளை ஏற்று இருவரையும் விடுவித்தது.

