ஆண்டிறுதிக்குள் விமானப் போக்குவரத்துத் துறையில் கொவிட்-19 கொள்ளைநோய்க்கு முந்தைய நிலையின் 85 முதல் 90% ஊழியர்கள் மீண்டும் இணைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொள்ளைநோயின்போது 35,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை இத்துறை இழந்ததாகக் கூறப்படுகிறது.
மீண்டுவரும் விமானப் போக்குவரத்துத் துறைக்கு ஊழியர்களை ஈர்க்கும் ஆள்சேர்ப்பு இயக்கத்தைத் துறை தொடங்கிவிட்டது என்றும் இது மாதக்கணக்கில் தொடரும் என்றும் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் நேற்று கூறினார்.
அவர் கலந்துகொண்டு பேசியிருந்த 'ஒன்ஏவியேஷன் கரியர்ஸ்' வேலைச் சந்தையிலேயே கிட்டத்தட்ட 2,000 பேர் வேலையில் அமர்த்தப்படுவர் என்று குறிப்பிட்டார் அவர்.
"விமானப் பயணங்களும் பயணத்துறையும் மீண்டுவருவதற்கு இத்துறையின் மனிதவளம் ஈடுகொடுக்க வேண்டும். அதை நாம் உறுதிசெய்ய வேண்டும்," என்றார் திரு சீ. தங்களிடம் கிட்டத்தட்ட 6,600க்கும் மேற்பட்ட வேலைகள் நிரப்பப்படாமல் உள்ளதாக சாங்கி விமான நிலையக் குழுமமும் அதன் விமான நிலைய பங்காளிகளும் தெரிவித்துள்ளன.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பர், காசாளர், துணை காவல்துறை அதிகாரி, சமையல்காரர், துப்புரவாளர், வர்த்தக மற்றும் தரவு ஆய்வாளர் எனப் பலதரப்பட்ட வேலைகளுக்கான விளம்பரங்கள் இந்த வேலைச் சந்தையில் இடம்பெற்றுள்ளன.
விமானப் போக்குவரத்துத் துறை தன்னை மாற்றங்களுடன் மேம்படுத்திக்கொள்வதாகவும் நீடித்த நிலைத்தன்மையிலும் மின்னிலக்கமயத்திலும் துறை கவனம் செலுத்தி வருவதாகவும் சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமை இயக்குநர் ஹான் கோக் ஜுவான் கூறினார். சரியான நபர்களை வேலையில் அமர்த்துவதால் இந்த வளர்ச்சியைத் துறை சிறப்பாகக் கையாளும் என்றும் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"ஒட்டுமொத்த விமானப் போக்குவரத்துத் துறையை ஒன்றிணைத்துக் கொண்டுவரும் இந்த வேலைச் சந்தை மிகவும் முக்கியமானது. மீண்டும் வியாபாரம் தொடங்கிவிட்டது என்பதையும் சிங்கப்பூரின் விமானப் போக்குவரத்து மையத்தை ஒன்றாக மேம்படுத்த சிங்கப்பூரர்கள் திரண்டு வரலாம் என்பதையும் வேலைச் சந்தை உணர்த்துகிறது," என்று குறிப்பிட்டார் அவர்.
சன்டெக் சிங்கப்பூர் மாநாடு, கண்காட்சி மையத்தில் நடைபெறும் இந்த வேலைச் சந்தை இன்றோடு முடிவடைகிறது.

