புதிதாக சிங்கப்பூரில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு கூடுதல் ஆதரவு கிடைக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
திட்டத்தின்கீழ் ஒத்துழைப்பு மற்றும் முதலீட்டு வாய்ப்புகளுக்காக அனைத்துலக நிறுவனங்களுடன் இந்தப் புதிய நிறுவனங்கள் இணைந்து செயல்பட முடியும். 700க்கும் மேற்பட்ட புதிய தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தின் வழி பலனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்துறை மேம்பாட்டு நிறுவனமான ஜூரோங் நகராண்மைக் கழகம் (ஜேடிசி), புதிய முதலீட்டுக் கட்டமைப்புத் திட்டத்தை நேற்று தொடங்கிவைத்தது.
நிறுவன பங்காளிகளுடன் ஒன்-நார்த், ஜூரோங் புத்தாக்க வட்டாரம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள புதிய தொழில் நிறுவனங்கள் இணைந்து செயல்படுவதற்குப் புதிய திட்டம் கைகொடுக்கும்.
இந்த நிறுவன பங்காளிகளின் வட்டார, அனைத்துலகக் கட்டமைப்புகளின் வழி புதிய தொழில் நிறுவனங்கள் விரிவடைவதற்கு திட்டம் ஏதுவாக இருக்கும். நிதி ஆதரவு வாய்ப்புகள், கூட்டு ஆராய்ச்சி, மேம்பாட்டு நடவடிக்கைகள் போன்றவற்றுக்கும் திட்டம் உதவும்.
கட்டமைப்பின் முன்னோடி உறுப்பினர்களாக இதுவரை எட்டு நிறுவன பங்காளிகள் இணைந்துள்ளன. இந்த எட்டு நிறுவனங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக $23 மில்லியன் அமெரிக்க டாலரை (S$31.5 மி.) முதலீடு செய்துள்ளன. சிங்கப்பூரைச் சேர்ந்த புதிய தொழில் நிறுவனங்கள் புதிய தீர்வுகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக அந்த முதலீடு பயன்படுத்தப்பட்டது.
நிறுவன பங்காளிகளும் புதிய தொழில் நிறுவனங்களும் இணைந்து செயல்படுவதற்கு அதிக வளர்ச்சி காணக்கூடிய வேளாண் உணவு, நிதித் தொழில்நுட்பம், தளவாடங்கள், நகரப் போக்குவரத்து, நீடித்த நிலைத்தன்மை துறைகள், முக்கிய ஒத்துழைப்பு அம்சங்களாக கண்டறியப்பட்டுள்ளன.

