வேலையிடங்களில் மனிதவள நடைமுறைகளை முறைப்படுத்துதல்
இனவெறி மற்றும் பாரபட்சமான பணியமர்த்தல் நடைமுறைகளால் ஏற்படக்கூடிய மக்களின் இனம் சார்ந்த கவலைகளை சரிசெய்ய நிறுவனங்கள் மனிதவள செயல்முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேலும் இனப் பாகுபாட்டு விவகாரங்கள் போன்றவற்றைத் தயங்காமல் ஊழியர்கள் தெரிவிக்க அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் என்று 'டஃபெப்' எனப்படும் நடுநிலையான வேலைவாய்ப்பு நடைமுறைகள் தொடர்பான முத்தரப்புக் கூட்டணி அமைப்பின் பொது மேலாளர் ஃபேத் லி தெரிவித்தார்.
உள்ளூர் ஹோட்டல் ஒன்றில் நேற்று நடைபெற்ற வேலையிடத்தில் ஒற்றுமையைக் கட்டிக்காப்போம் எனும் மாநாட்டில் பேசியபோது திருவாட்டி லி அவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டுக்கு, இன நல்லிணக்கத்தை மேம்படுத்த அமைக் கப்பட்ட தேசிய அமைப்பான 'ஒன்பீப்பள் எஸ்ஜி'யும் கொள்கை ஆய்வுக் கழகமும் கூட்டாக ஏற்பாடு செய்திருந்தன.
சமயத் தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள், கல்வியாளர்கள், பெரிய நிறுவனங்கள் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் என சுமார் 250 பேர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றிய மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூன், "வேலையிடங்களில் இனவெறிச் செயல்களைத் துடைத்தொழிக்க இன்னும் அதிகம் செய்யலாம். வேலையிடத்தில் பாகுபாடு காட்டுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க, கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டு வர அரசாங்கம் முயற்சி எடுத்து வருகிறது," என்றார்.
ஆனால், சட்ட நடவடிக்கையால் மட்டும் இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க முடியாது என்று குறிப்பிட்ட அமைச்சர், "உண்மையில் சட்ட நடவடிக்கை எடுக்கும் கலாசாரத்தைத் தவிர்க்க விரும்புகிறோம். வேலையிடத்தில் அனைவரும் பாரபட்சமின்றி நடத்தப்படுவதையே விரும்புகிறோம். அதே நேரத்தில் எந்த வகையிலும் பாகுபாடு சகித்துக்கொள்ளப்படாது என் பதை உறுதி செய்ய வேண்டும்.
"எனவே, முத்தரப்புப் பங்காளிகள், சரியான மனநிலை மற்றும் நடைமுறைகளை வடிவமைக்க முதலாளிகளை ஈடுபடுத்துவதற்கு தொடர்ந்து முன்னுரிமை அளிப்பார்கள். மேலும் முடிந்தவரை பஞ்சாயத்து மூலம் புகாரளிக்கப்பட்ட வழக்குகளைத் தீர்க்க முயல்வார்கள்," என்றார்.
மலாய்க்காரர்கள், இந்தியர்கள் உட்பட சிறுபான்மை இனத்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வேலையிடப் பாகுபாட்டால் தாங்கள் பாதிக்கப்படுவதை உணர்ந்துள்ளனர் என்று 2013, 2019ஆம் ஆண்டுக்கான கொள்கை ஆய்வுக் கழக ஆய்வுகள் காட்டுவதாக, கொள்கை ஆய்வுக் கழகத்தின் முதன்மை ஆய்வாளர் மேத்யூ மேத்யூஸ் கூறினார்.
இந்த உணர்வுகள் பணியமர்த்தல், பதவி உயர்வு ஆகிய பகுதிகளுக்கும் நீட்டிக்கப்படுகின்றன.
பெரும்பாலான சிங்கப்பூரர்கள் சகிப்புத்தன்மை மற்றும் பன்முகக் கலாசாரத்தை முக்கியமான பண்புநெறிகளாகக் கருதினாலும், 10 விழுக்காட்டுக்கும் குறைவான சிறுபான்மையினர், மருத்துவமனைகள், பள்ளிகள் போன்ற பொது இடங்களில் தங்களுக்கு மோசமான சேவை வழங்கப்படுவதை உணர்கிறார்கள்.
இருப்பினும், வேலையிடத்தில் இனப் பாகுபாடு ஒரு பிரச்சினையாகவே நீடித்து வருகிறது என்று டாக்டர் மேத்யூஸ் கூறினார்.

