உலோகக் குழாயின் அடியில் சிக்கி ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்
ஒரு கனரக நீள்வாகனத்துக்கும் ஒரு லாரிக்கும் இடையில், ஒரு பெரிய உரோகக் குழாயின் அடியில் சிக்கி 49 வயது ஊழியர் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரை மீட்டு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வீரர்கள் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் மரணமடைந்தார் என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.
இந்த மரணத்தையும் சேர்த்து இதுவரை வேலையிட விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25க்கு உயர்ந்துள்ளது. இது 2016க்குப் பிறகு ஆக அதிக எண்ணிக்கையாகும். மனிதவளப் பற்றாக்குறை, கட்டுமானத் திட்டங்களை விரைவில் முடிக்கவேண்டும் என்ற அவசர நிலையின் பின்னணியில் இப்படிப்பட்ட உயரிழப்புகள் அதிகமாக நிகழ்கின்றன.
மாண்ட அந்த ஊழியர் 18 டெஃபு அவென்யூவில் வேலை செய்து வந்தார். அவர் குட் இயர் காண்ட்ராக்டர் நிறுவனத்தின் ஊழியர். விபத்து குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ள மனிதவள அமைச்சு, அந்தத் தளத்தில் தனது பணிகள் அனைத்தையும் நிறுத்துக்கொள்ளுமாறு குட் இயர் காண்ட்ராக்டர் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூருக்கு கோழிகளை அனுப்ப விரையும் மலேசியப் பண்ணைகள்
மலேசியாவில் உள்ள கோழி விநியோகிப்பாளர்கள் கூடுதல் நேரம் வேலை செய்து, ஏற்றுமதித் தடை ஜூன் 1 ஆம் தேதி நடப்புக்கு வரும் முன் கடற்பாலம் வழியாக சிங்கப்பூருக்கு தங்களால் இயன்ற அளவு கோழிகளை அனுப்ப விரைகின்றனர்.
கோழிகளை ஏற்றுமதி செய்ய தடைவிதித்து மலேசிய அரசாங்கம் அதிரடியாக அறிவித்தது தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று மலேசியாவின் எட்டு கோழி விநியோகிப்பாளர்கள் தெரிவித்தனர்.
கூடுதல் லாரிகள், விநியோக சேவைகளுக்கு ஏற்பாடு செய்ய சில பண்ணைகள் 24 மணி நேரமும் வேலை செய் வதால், சிங்கப்பூருக்கு தங்களின் விநியோகத்தை முடிந்த வரை அனுப்ப விரைவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
துவாஸ் சோதனைச் சாவடியில் உள்வரும் உயிர்க் கோழிகளை ஆய்வு செய்வதற்காக விலங்கு கால்நடை சேவை மே 25 முதல் மே 31 வரை அலுவலக நேரத்தை நீட்டித்துள்ளது என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியது.
சிங்கப்பூருக்கு உயிருள்ள கோழிகளை மேற்கு மலேசியா வில் உள்ள 115 பண்ணைகளில் இருந்து மட்டுமே இறக்கு மதி செய்ய முடியும். அவற்றில் 91 ஜோகூரில் உள்ளன.
தொழிற்சாலை கட்டடத்தில் குளோரின் வாயு: 20 பேர் வெளியேற்றம்
செம்பவாங்கில் உள்ள தொழிற்சாலை கட்டடத்தில் குளோரின் வாயு கசிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அங்கிருந்த 20 பேர் கட்டடத்திலிருந்து அப்புறப் படுத்தப்பட்டுள்ளனர்.
எண் 2, காம்பாஸ் அவென்யூவில் உள்ள 'நோட்காம் II' எனும் கட்டடத்தில் வாயு கசிந்திருப்பதுபோல உணரப்படுவ தாக என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு நேற்றுக் காலை 7.15 மணிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்த குடிமைத் தற்காப்புப் படையினர், கட்டடத் தின் குப்பை நசுக்கும் அறையில் குளோரின் வாயு கசிந்திருப்பதைக் கண்டுபிடித்தனர்.
தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் இரண்டு பெரிய காற்றாடி களைக் கொண்டும் அறையிலுள்ள வாயுவின் அபாய அளவு கட்டுப்படுத்தப்பட்டது. அறைக்கு வெளியில் உள்ள காற்றின் தரம் பாதுகாப்பாக இருப்பதை தாங்கள் உறுதி செய்ததாக என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்றுக் காலை 10.10 மணிக்குப் பதிவிட்டது. இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் இல்லை.
டோசன் பேட்டைக்கு குடிபெயர்வோர் தங்கள் வீட்டின் சாவியைப் பெற்றனர்
டோசன் பேட்டைக்குக் குடிபெயரும் முன்னாள் தங்ளின் ஹால்ட் குடியிருப்பாளர்கள் நேற்று தங்கள் புதிய வீட்டுக்கான சாவியை பெற்றுக்கொண்டனர். அவர்கள் டோசன் பேட்டையில் உள்ள இரண்டு முதல் ஐந்தறை வீடுகளுக்குக் குடிபெயர்வர்.
தங்ளின் ஹால்ட் பகுதியில் இருந்த 3,480 குடும்பங் களில் 74 விழுக்காடு அதாவது 2,588 குடும்பங்கள் ஏப்ரல் 30ஆம் தேதி வரை, டோசன் வீடுகளுக்கு விண்ணப்பித்து இருந்தன என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் நேற்று தனது அறிக்கையில் தெரிவித்தது.

