புதுப்பிக்கப்பட்ட சாங்கி விமான நிலையத்தின் 2வது முனையம் இன்று பயணிகளை வரவேற்றது. ஜெர்மனியின் மியூனிக் நகரிலிந்து புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை 2வது முனையத்தில் தரையிறங்கியது.
எஸ்கியூ327 விமானத்தில் பயணம் செய்தவர்கள் புதுப்பிக்கப்பட்ட முனையத்தின் புதிய அம்சங்களையும் வசதிகளையும் வரவேற்றனர்.
முனையத்தின் வருகையாளர் கூடத்திலிருந்து முதல் ஆளாக வெளியே வந்தார் நிதித் துறையில் பணியாற்றும் கெளஷிக் மோகன், 38. முனையத்தில் செயல்படும் புதிய தானியக்கக் குடிநுழைவுச் சோதனை முறையைப் பயன்படுத்துவது மிக எளிதாகவும், விரைவாகவும் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
முனையத்தில 34 தானியக்கக் குடிநுழைவுச் சோதனை வரிசைகள் உள்ளன. இவற்றில் 12 வரிசைகள் நடமாட சிரமம் உள்ளவர்களும் பெரிய குடும்பங்களும் பயன்படுத்த ஏதுவாக தாராளமாக அமைக்கப்பட்டுள்ளன.
முனையத்தின் புறப்படும் கூடம் உள்ளிட்ட சில பகுதிகளில் இன்னும் புதுப்பிப்புப் பணிகள் நடந்துவருகின்றன. அனைத்து பணிகளும் 2024ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாவது முனையத்திலிருந்து செயல்படும் சில விமானச் சேவைகள் உச்ச நேரங்களின்போது இரண்டாவது முனையத்தில் இயங்கும்.