மூத்த குடிமக்களில் மேலும் அதிகமானோரை தொழில்நுட்பத் திறனுடையவர்களாக மாற்ற உதவும் நோக்கில் கேலாங் செராய் மரபுடைமைத் திட்டம் மின்னிலக்கத் தொழில்நுட்பத்துடன் கைகோத்துள்ளது.
மின்னிலக்க அம்சத்துடனான கேலாங் சிராய் மரபுடைமை நடைபாதை நேற்று அறிமுகம் கண்டது. கேலாங் வட்டாரத்தைச் சுற்றிப் பார்க்க விரும்பும் மூத்த குடிமக்கள் இனி தங்கள் கைத்தொலைபேசியின் உதவியுடன் மேம்பட்ட அனுபவத்தைப் பெற இது வகைசெய்யும்.
'கியூஆர்' குறியீடுகள், நடைப் பயணத்தில் வழிகாட்டும் செயல்முறை போன்ற அம்சங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
மூத்த குடிமக்கள் மின்னிலக்கத் திறன்களைக் கற்றுக்கொள்ள ஊக்குவிப்பது நோக்கம்.
2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கேலாங் சிராய் நடைபாதைத் திட்டத்தில் லோரோங் 22 கேலாங்கில் இருந்து யூனோஸ் கிரசென்ட்டிற்குச் செல்ல மூன்று நடைபாதைகள் உண்டு.
முன்னாள் கேலாங் தீயணைப்பு நிலையம், காலிட் பள்ளிவாசல், 'ரோச்சோர் பீன்கர்ட் ஹவுஸ்' போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றின் வழியாகச் செல்லும் இந்தப் பாதைகளில் நடப்போருக்கு அந்தந்த இடங்கள் பற்றிய வரலாறு, முக்கியத்துவம் ஆகியவற்றை விளக்கும் தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.
புதிய மின்னிலக்கத் திட்டத்தில் 'கியூஆர்' குறியீட்டின் மூலம் நடைபாதை குறித்த கூடுதல் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். மூத்தோர் எடுத்துவைத்த காலடிகளின் எண்ணிக்கையைப் பதிவுசெய்து அதன் அடிப்படையில் பொருள் வாங்குவதற்குரிய பற்றுச்சீட்டுகளையும் அவர்கள் பெற முடியும்.
நடக்கும்போது எடுத்த படங்களை நண்பர்களுடனும் சமூக ஊடகங்களிலும் பகிர்ந்துகொள்ளும்படி அவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
நேற்று மின்னிலக்க அம்சத்துடனான மரபுடைமை நடைபாதையில் சென்ற மூத்த குடிமக்கள் 35 பேருடன் தென்கிழக்கு மாவட்ட மேயர் ஃபாமி அலிமானும் இணைந்துகொண்டார்.