தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசும் ('என்டியுசி') வெளிநாட்டு ஊழியர் நிலையமும் இணைந்து வேலையிடப் பாதுகாப்பு தொடர்பில் இணையப் பாடங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
வெளிநாட்டு ஊழியர்கள் இடையே மேம்பட்ட வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரத் தரநிலைகள் ஆகியவற்றைத் தக்கவைத்துக்கொள்ள உதவும் வகையில் சிறிய அளவிலான பாடங்கள் இணையத்தில் வெளியிடப்படும்.
தங்களது ஓய்வு நேரத்தில் இந்தப் பாடங்களைப் பயின்று அவர்கள் தாங்கள் அறிந்தவற்றை நினைவுபடுத்திக் கொள்ளலாம். இதுகுறித்த மேல்விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்தது.
அண்மையில் வேலையிட மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து சிங்கப்பூரில் சில நிறுவனங்களில் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார வழிகாட்டிக் குறிப்புகளை மறுஆய்வு செய்யும் பொருட்டு தற்காலிகமாக வேலை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 'என்டியுசி' இணையப் பாடங்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் வந்தவுடன் அல்லது தங்கள் வேலை அனுமதிச் சீட்டைப் புதுப்பிக்கும்போது பாதுகாப்புச் சான்றிதழைப் பெறவேண்டியது கட்டாயம்.
ஊழியர்களிடையே வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வும், போதிய புரிதலும் இருந்தால், வேலையிட மரணங்களைத் தவிர்க்க இயலும் என்று 'என்டியுசி'யின் துணைத் தலைமைச் செயலாளரும் ராடின் மாஸ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு மெல்வின் யோங் கூறினார்.
பைனியர் சாலைக்கு அருகே உள்ள வெளிநாட்டு ஊழியர் நிலைய பொழுதுபோக்குக் கூடத்தில் இடம்பெற்ற மே தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் அவர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார்.
வெளிநாட்டு ஊழியர்களின் பாதுகாப்பும் அவர்கள் வேலையிடப் பாதுகாப்பு குறித்து அறிந்துகொள்ள உதவுவதும் நம் அனைவரின் பொறுப்பு என்றார் அவர். 6,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.