ஹர்ஷிதா பாலாஜி
சமுதாய சிக்கல்களையும் சுகாதாரப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்குப் புத்தாக்க படைப்புகளை உருவாக்க மேப்பல்டிரீ சவால் போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் கலந்துகொண்ட 120 சிங்கப்பூர் தொழில்நுட்ப கல்விக் கழக மாணவர்களில் 11 மாணவர்கள் இரு குழுக்களாக இறுதிச் சுற்றில் பங்கேற்று முதல் பரிசைத் தட்டிச் சென்றனர்.
சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்விக் கழகமும் மேப்பல்டிரீ முதலீட்டு நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்த இப்போட்டியில் முதல் பரிசை தட்டிச்சென்ற இரு குழுக்களுக்கும் 5000 வெள்ளியுடன் வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது. வெற்றிபெற்ற குழுக்களில் ஒன்று 'டீம் ராட்னோவேஷன்'. இயந்திரப் பொறியியல் துறையில் படிக்கும் ஆறு இரண்டாம் ஆண்டு மாணவர்களைக் கொண்ட இக்குழுவின் தொழில்நுணுக்க ஆலோசகர் 25 வயது ராமசாமி சுப்பிரமணியம் ஆவார்.
"எத்தகைய சமுதாய பிரச்சினையைத் தீர்க்கலாம் என்று நாங்கள் சிந்தித்துக்கொண்டிருந்தோம். அப்போது கை எலும்பு முறிந்ததால் வாரத்தில் நான்கு ஐந்து நாட்களுக்கு மறுவாழ்வு நிலையத்துக்கு எங்கள் நண்பர் சென்றுகொண்டிருந்தார் என்பதை அறிந்தோம். இந்தச் சிக்கலையே கையாளலாம் என்று முடிவெடுத்தோம்," என்றார் ராமசாமி.
ஆகையால், மூப்படையும் மக்கள்தொகையை கருத்தில்கொண்டு மறுவாழ்வு நிலையங்களில் வழங்கப்படும் சேவைகளை வசதி குறைந்தவர்களுக்கும் முதியவர்களுக்கும் வீட்டிலேயே வழங்கலாம் என்ற யோசனை குழுவினருக்குத் தோன்றியது.
உடற்குறையால் பாதிக்கப்
படுவோர் வீட்டிலிருந்தபடியே தேவையான உடற்பயிற்சிகளை செய்யக்கூடிய சாதனத்தைக் குழு உருவாக்கியது. எங்கு சென்றாலும் தங்களுடன் கொண்டு செல்லும் இந்தச் சாதனத்தின் உதவியோடு உடலின் மேற்பகுதித் தசைகள் தொடர்பான உடற்பயிற்சிகளைச் செய்யலாம். ஆயினும், இந்த சாதனத்தை உருவாக்கியதுடன் இறுதிச் சுற்றில் அதை நடுவர்களிடம் குழுவினர் விற்க முயலவும் வேண்டும்.
"சிறப்புத் தேவைகள், மருத்துவம் தொடர்பான பல திட்டங்களில் ஈடுபட்ட அனுபவம் எங்களுக்கு இருந்தபோதும் விற்பனை செய்வது பற்றியும் வணிகத்துறை பற்றியும் அதிகம் தெரியாது. இதனால் எங்கள் சாதனத்தை எப்படி விற்கலாம் என்ற குழப்பத்தி
லிருந்தோம். இருப்பினும், எங்கள் குழுவின் வழிகாட்டி திரு டோவின் அறிவுரையைப் பின்பற்றி முதல் பரிசை வென்றோம்," என்றார் ராமசாமி.
இந்த சாதனத்தை மேம்படுத்தி உடலிலுள்ள மற்ற தசைகளைச் சரிசெய்யக்கூடிய வசதியைக் கொண்டுவரவும் சுலபமான பயன்பாட்டுக்காக சாதனத்துடன் ஒரு செயலியை உருவாக்கவும் இக்குழு திட்டமிட்டுள்ளது.
அனைவரும் இந்த சாதனத்தைக் குறைந்த விலையில் வாங்கி பயன்படுத்தவேண்டும் என்பதே இந்த இளையர் குழுவின் நோக்கமாகும்.
புத்தாக்க படைப்பாளிகளாக
தொழில்நுட்பக் கழக மாணவர்கள்